விபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு: தஞ்சை கோர்ட்டு உத்தரவு


விபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு: தஞ்சை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 Oct 2018 10:00 PM GMT (Updated: 12 Oct 2018 8:02 PM GMT)

தஞ்சை அருகே சாலை விபத்தில் பலியான, பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.9¼ லட்சமும், இதில் படுகாயம் அடைந்தவருக்கு ரூ.7½ லட்சமும் இழப்பீடாக வழங்க தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை ரிஸ்வான் நகரை சேர்ந்தவர் சவுந்திரராஜன் (வயது 40). இவருடைய மனைவி சரஸ்வதி(36). இவர் விவசாய கூலித்தொழிலாளியாக வேலை செய்துவந்தார். கடந்த 30.10.2017 அன்று சரஸ்வதி தனது குடும்பத்தார், உறவினர்களுடன் அரசு பஸ்சில் நாகப்பட்டினம் சென்றுகொண்டிருந்தார். தஞ்சை-நாகை சாலை அம்மாப்பேட்டை பனங்காடு அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் பஸ், அரசு பஸ் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சரஸ்வதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் இழப்பீடு கோரி சரஸ்வதியின் கணவர் சவுந்திரராஜன் தஞ்சை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ண ஜெயஆனந்த், விபத்தில் பலியான சரஸ்வதி குடும்பத்துக்கு ரூ.9 லட்சத்து 34 ஆயிரம் இழப்பீடாக வழங்குமாறு நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவன தஞ்சை மேலாளருக்கு உத்தரவிட்டார்.
இதேபோல இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சரஸ்வதியின் உறவினர் மாரியம்மாளும் (33) இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மாரியம்மாளுக்கு ரூ. 7 லட்சத்து 65 ஆயிரத்து 375 இழப்பீடாக வழங்கவும் நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவன தஞ்சை மேலாளருக்கு உத்தரவிட்டார்.

தஞ்சை கீழவாசல் தாசப்பநாயக்கன் தெரு கனகம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சித்திரைச்செல்வி. குடிகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை செய்துவந்தார். கடந்த 11.3.2015 அன்று சித்திரைச்செல்வி சைக்கிளில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார். கும்பகோணம்-திருவையாறு சாலை கணபதி அக்ரஹாரம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் சைக்கிள் மீது மோதியது. இதில் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சித்திரைச்செல்வி படுகாயம் அடைந்தார். தற்போது நடக்க முடியாத நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே இழப்பீடு கோரி சித்திரைச்செல்வி தஞ்சை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் மற்றும் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சித்திரைச்செல்விக்கு இழப்பீடாக ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்து 821 வழங்குமாறு தி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன தஞ்சை மண்டல மேலாளருக்கு உத்தரவிட்டார்.

Next Story