கடம்பூர் அருகே கட்டையால் அடித்து முதியவர் கொலை; பேரன் வெறிச்செயல்


கடம்பூர் அருகே கட்டையால் அடித்து முதியவர் கொலை; பேரன் வெறிச்செயல்
x
தினத்தந்தி 12 Oct 2018 11:00 PM GMT (Updated: 12 Oct 2018 8:31 PM GMT)

கடம்பூர் அருகே மதுகுடிக்க பணம் தராததால் முதியவரை கட்டையால் அடித்து பேரன் கொலை செய்தார்.

டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த மாக்கம்பாளையம் அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் புட்டப்பா என்கிற சித்தேகவுடா (வயது 68). இவருடைய மகன் பசவண்ணா. பேரன் கோவிந்தன் (27). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பசவண்ணா இறந்துவிட்டார்.

கோவிந்தனுக்கும், குன்றியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. கோவிந்தனுக்கு மதுபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மேலும் கடந்த 6 மாதங்களாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போலவும் நடந்துகொண்டார். இதனால் கோவிந்தனின் மனைவி அவரை பிரிந்து குன்றியில் உள்ள தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதனால் கடந்த சில நாட்களாக தாத்தா சித்தேகவுடாவுடன் கோவிந்தன் வசித்து வந்தார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு கோவிந்தன் வீட்டுக்கு சென்று சித்தேகவுடாவிடம் மதுகுடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தன் கட்டில் காலை (கட்டை) எடுத்து சித்தேகவுடாவின் தலை மற்றும் உடலில் பல இடங்களில் பயங்கரமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்துவிட்டார். இதனால் கோவிந்தன் அங்கிருந்து ஓடி தலைமறைவாகிவிட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணி அளவில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சித்தேகவுடா கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்.

உடனே இதுபற்றி கடம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் கடம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கோவிந்தனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மதுகுடிக்க பணம் தராததால் தாத்தாவை பேரனே அடித்துக்கொன்ற சம்பவம் கடம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story