புதுச்சேரியில் பரவி வரும் மர்ம காய்ச்சல் பொதுமக்கள் அவதி


புதுச்சேரியில் பரவி வரும் மர்ம காய்ச்சல் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 12 Oct 2018 10:45 PM GMT (Updated: 12 Oct 2018 8:48 PM GMT)

புதுவையில் பரவி வரும் மர்ம காய்ச்சலினால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த சில நாட்களாக பெருமளவு மக்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோல் முத்தியால்பேட்டை பாரதிதாசன் வீதியை சேர்ந்த ஜோசப் (வயது 91) என்பவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் ஜப்பானிஸ் என்செப்லடிஸ் என்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஜோசப்பை வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடமும் கேட்டறிந்தார். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து இதுபோன்ற காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து புதுவை அரசு ஆஸ்பத்திரியின் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் ரவியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

ஜப்பானிஸ் என்செப்லடிஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முதன் முதலாக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலும் சாதாரண கொசு மூலம் பரவும் வைரஸ் காய்ச்சல்தான். இந்த காய்ச்சலுக்கு எதிர்ப்பு சக்தியினை கொடுக்கக்கூடிய மருந்துகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த காய்ச்சல் கொசுக்கள் மூலம்தான் பரவும். இது தொற்றுநோய் அல்ல. எனவே கொசு உற்பத்தியை தடுக்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. சமீபத்தில் கிருமாம்பாக்கம்பேட் பகுதியில் சிலருக்கு சிக்குன் குனியா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அது சரிசெய்யப்பட்டு விட்டது.

மழைக்காலங்களில் பெருகும் நோய் தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தலைமையில் ஆய்வுக்கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஜிப்மர் மற்றும் அரசு சுகாதார அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு டாக்டர் ரவி கூறினார்.


Next Story