காவிரி-அமராவதி ஆற்று உபரிநீரை ஏரி, குளங்களில் சேமிக்கக்கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காவிரி-அமராவதி ஆற்று உபரிநீரை ஏரி, குளங்களில் சேமிக்கக்கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2018 10:30 PM GMT (Updated: 12 Oct 2018 9:29 PM GMT)

காவிரி மற்றும் அமராவதி ஆற்று உபரிநீரை ஏரி, குளங்களில் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கரூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்,

கரூர், திண்டுக்கல், திருச்சி மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை மாநில தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். கொ.ம.தே.க. மாநில வர்த்தக அணி செயலாளர் விசா.ம.சண்முகம், மாநில துணை பொது செயலாளர் சக்தி நடராஜன், மாநில பொருளாளர் அம்மையப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் காவிரி- அமராவதி ஆற்று உபரிநீரை வாய்க்கால், குழாய் உள்ளிட்டவற்றின் மூலமாக ஏரி, குளங்களில் நிரப்பி தண்ணீர்தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் அந்த ஆறுகளில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். வெள்ளியணை, வீரராக்கியம், உப்பிடமங்கலம் பகுதி குளங்கள் மற்றும் கரூர் அருகே பெரியதாதம்பாளையம் ஏரியிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூர்வார வேண்டும். கரூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிய நீர்நிலைகளை உருவாக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது நீர்மேலாண்மையை முறையாக கையாள தவறிய தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இந்த நிலையில் பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்தி மத்திய- மாநில அரசுகள் வஞ்சிப்பதால், காய்கறிகள், பழங்கள், பயிர்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக வெளியிடங்களுக்கு கொண்டுசெல்வதில் விவசாயிகள் சிரமம் அடைய வாய்ப்பிருக்கிறது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும். நாகரிக வளர்ச்சியின் உச்சத்தில் நாம் சென்று கொண்டிருக்கிற போதிலும் முன்பிருந்ததை விட விவசாய விளை நிலங்களின் பரப்பளவு குறைந்து கொண்டே செல்கிறது. இதனை தடுத்து நிறுத்தி இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபட செய்ய அரசு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். உலகப்போர் மீண்டும் வந்தால் அது தண்ணீருக்கும், உணவுக்குமாக தான் இருக்கும் என்று வல்லுநர்கள் பலர் தெரிவிக்கின்றனர். எனவே வருங்கால சந்ததியினருக்கு விவசாயத்தை கற்று கொடுப்பதிலும் நாம் ஆர்வம் காட்ட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பேசிய கொ.ம.தே.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, மேற்கு மாவட்ட செயலாளர் மீனாட்சி ரமேஷ், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் அருள், திருச்சி மாவட்ட செயலாளர் சேகர் உள்பட கொ.ம.தே.க.வினர் மற்றும் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story