சுற்றுச்சுவரில் விமானம் மோதிய போது கணவருடன் காரில் சென்ற பெண் தலையில் கல் தாக்கி காயம்


சுற்றுச்சுவரில் விமானம் மோதிய போது கணவருடன் காரில் சென்ற பெண் தலையில் கல் தாக்கி காயம்
x
தினத்தந்தி 12 Oct 2018 11:00 PM GMT (Updated: 12 Oct 2018 9:57 PM GMT)

சுற்றுச்சுவரில் விமானம் மோதியதில் பறந்து வந்த கல் தாக்கி, கணவருடன் காரில் சென்ற பெண் தலையில் காயம் அடைந்தார்.

திருச்சி,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 1.15 மணிக்கு துபாய்க்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் இருந்து எழும்பி மேலே பறக்க முயன்றபோது, அதன் சக்கரங்கள் விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் மீது மோதிய விமானம் மேலே பறந்த அந்த அபாயகரமான நேரத்தில், ஒரு கார் விமான நிலையத்தில் இருந்து வெளியேறி திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த காரில் திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் என்ற கிராமத்தை சேர்ந்த ராஜா செல்வராஜ் என்பவரும், அவரது மனைவி மணிமாலாவும் இருந்தனர். விமானம் மோதியதால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரின் ஒரு கல் பறந்து வந்து காருக்குள் இருந்த மணிமாலாவின் தலையில் விழுந்தது. இதில் அவர் காயம் அடைந்தார்.

தலைக்கு மேலாக பறந்த விமானத்தினாலும், கல் தாக்கியதாலும் தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தாலும் அதிர்ச்சியை தாங்கிக்கொண்டு ராஜா செல்வராஜ் தனது மனைவியை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்தார். சிகிச்சை முடிந்த பின்னர் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். முன்னாள் ராணுவ வீரரான ராஜா செல்வராஜ், துபாயில் இருந்து வந்த அதே விமானத்தில் தான் திருச்சிக்கு வந்து இறங்கி உள்ளார். விமான நிலையத்தில் அனைத்து பரிசோதனைகளும் முடிந்து மனைவியுடன் ஊருக்கு திரும்பிய போது தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிமாலா தலையில் காயம் பட்டது பற்றி திருச்சி விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. விமான நிலைய போலீசார் இதுபற்றி ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமானம் சுற்றுச்சுவரில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட கல், தம்பதியினர் வந்த காரையும் சேதப்படுத்தியது. இந்த கார் அம்மையப்பன் ஊரைசேர்ந்த ராணுவ வீரரான அன்பழகன் என்பவருக்கு சொந்தமானது. ராஜாசெல்வராஜ் துபாயில் இருந்து வருவதை அறிந்து அன்பழகன் தனது சொந்த காரிலேயே அழைத்து வருவதற்காக திருச்சி விமானம் நிலையம் வந்துள்ளார்.

விபத்து குறித்து ராணுவ வீரர் அன்பழகன் கூறுகையில், “ராஜா செல்வராஜ் ஏற்கனவே, கால் எலும்பு முறிந்து கட்டுடன்தான் வந்தார். எனவே, பக்கத்து வீடு என்பதால் உதவும் எண்ணத்தில் என் சொந்த காரை எடுத்து வந்தேன். நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் விமான நிலையத்தை விட்டு சாலையில் 100 அடிதான் சென்றிருப்போம். அப்போதுதான் விமானத்தின் டயருடன் கூடிய வீல் தடுப்பு சுவரில் மோதியது. அப்போது வேகமாக வந்த கற்கள் காரின் மீது டம்..டம் என விழுந்தன. இதனால், கார் சேதமானது. மேலும் கற்கள் வந்த வேகத்தில் காரும் சுமார் 15 அடி தூரம் சாலையில் இருந்து சறுக்கி சென்று சாலையோரம் நின்று விட்டது. மேலும் காரின் முன்பக்கம் விழுந்த கல் ஒன்று, மழைத்துளி மற்றும் தண்ணீரை விலக்கும் ‘வைபர்’-ஐ உடைத்தெரிந்து விட்டது. இது தொடர்பாக விமான நிலையம் போலீசில் புகார் கொடுத்துள்ளேன்” என்றார்.

Next Story