சேத்தியாத்தோப்பு அருகே முத்துமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


சேத்தியாத்தோப்பு அருகே முத்துமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 12 Oct 2018 9:30 PM GMT (Updated: 12 Oct 2018 11:23 PM GMT)

சேத்தியாத்தோப்பு அருகே முத்துமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேத்தியாத்தோப்பு,


சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இக்கோவில் பின்பக்க இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. மேலும் இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள கீர்த்தி அம்மன் கோவில் அருகே 4 அடி உயர உண்டியல் ஒன்று உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி கிராம முக்கியஸ்தர்களுக்கும், சேத்தியாத்தோப்பு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உண்டியலை பார்த்தனர். அப்போது அந்த உண்டியல் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான உண்டியல் என்பது தெரியவந்தது.

இதற்கிடையே சேத்தியாத்தோப்பு போலீசார் அங்கு வந்து திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் நள்ளிரவில் கோவிலின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கு இருந்த உண்டியலை உடைத்து எடுத்து சென்றுள்ளனர். இதையடுத்து கீர்த்தி அம்மன் கோவில் அருகே வைத்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றுள்ளனர். ஆனால் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை. மேலும் கீர்த்தி அம்மன் கோவிலில் இருந்த 4 கிராம் தங்க காசையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இதே கோவிலில் நள்ளிரவில் மர்மநபர்கள் உண்டியலை உடைக்க முயன்றனர். அப்போது இந்த சத்தம் கேட்டு பொதுமக்கள் வரவே, மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த நிலையில் இக்கோவிலில் மீண்டும் உள்ளே புகுந்த மர்மநபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றிருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story