வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே மந்தமாக நடைபெறும் மேம்பால பணியால் வாகன ஓட்டிகள் அவதி


வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே மந்தமாக நடைபெறும் மேம்பால பணியால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 13 Oct 2018 10:45 PM GMT (Updated: 13 Oct 2018 6:16 PM GMT)

வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே மந்தமாக நடைபெறும் மேம்பால பணியால் தினமும் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.

வண்டலூர்,

வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை வளைவு எதிரே உயர் மட்ட மேம்பாலம் கட்டும்பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த மேம்பாலம் கட்டும் பணி தொடங்கிய நாள் முதல் தற்போது வரை மிகவும் மந்தமான நிலையில் பணிகள் நடைபெறுகிறது.

இதன் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வண்டலூர் பூங்காவில் இருந்து கிளாம்பாக்கம் வரை தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதே போல கேளம்பாக்கத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் சென்னை செல்வதற்காக திரும்ப முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பல மணி நேரம் தவிக்கின்றனர்.

இப்படி வாகனங்கள் திரும்பும் போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக வண்டலூர் பூங்காவில் இருந்து கிளாம்பாக்கம் வரை வாகனங்கள் கடந்து செல்வதற்கு காலை மற்றும் மாலை நேரங்களில் 1 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.

மற்ற நேரங்களில் குறைந்தப்பட்சம் அரை மணி நேரம் ஆகிறது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகன ஓட்டிகளும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இதே போல தென் மாவட்டங்களில் இருந்து மருத்துவ அவசர சிகிச்சை பெறுவதற்காக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் வரும் நோயாளிகள் இந்த இடங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரிதும் அவதிப்படுகின்றனர்.

இதன் காரணமாக ஒரு சில நோயாளிகள் குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறந்து விடுகின்றனர். மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 500 மீட்டர் வரை உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இதன் காரணமாகவும் இந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகையால் குண்டும், குழியுமாக உள்ள சாலையை உடனே சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story