குடோன்களில் பதுக்கி வைத்து பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டாம் - அதிகாரி அறிவுரை


குடோன்களில் பதுக்கி வைத்து பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டாம் - அதிகாரி அறிவுரை
x
தினத்தந்தி 13 Oct 2018 10:30 PM GMT (Updated: 13 Oct 2018 6:44 PM GMT)

விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பட்டாசு வியாபாரிகள் குடோன்களில் பதுக்கி வைத்து பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டாம் என அதிகாரி கூறினார்.

சிவகாசி,

சிவகாசியில் பட்டாசு வியாபாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிவகாசி தாசில்தார் பரமானந்தராஜா தலைமை தாங்கினார். பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலை ஆய்வு தனி தாசில்தார் இப்ராகிம்ஷா முன்னிலை வகித்தார். பட்டாசு வணிகர் சங்க செயலாளர் இளங்கோ வரவேற்று பேசினார். கூட்டத்தில் தனி தாசில்தார் இப்ராகிம்ஷா பேசும்போது கூறியதாவது:–

சிவகாசியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 பட்டாசு கடைகள் புதிதாக தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மட்டும் தற்போது 393 பட்டாசு கடைகள் இயங்கி வருகிறது. பட்டாசு கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் பட்டாசுகளை இருப்பு வைக்க வேண்டும். குடோன், தகர செட் ஆகிய இடங்களில் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ய வேண்டாம். இது விபத்துகளை ஏற்படுத்தும்.

அதேபோல் சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் பட்டாசுகளை கடைகளில் வைத்து விற்பனை செய்ய வேண்டாம். உங்கள் கடைகளில் உள்ள பட்டாசுகளுக்கு உரிய ரசீது நீங்கள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சிவகாசி தீயணைப்புத்துறை அலுவலர் பாலமுருகன் பேசும்போது, பட்டாசு கடைகளில் உள்ள தீயணைப்பு கருவிகளை பழுது இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தண்ணீர், மணல் நிரப்பிய வாளிகளை கடையின் வெளியே கட்டாயம் வைக்க வேண்டும். குறைந்த வயதுடைய தொழிலாளர்களையும், வயது முதிர்ந்தவர்களையும் பணிக்கு வைக்க கூடாது. அவர்களால் பட்டாசு பண்டல்களை கையாளுவதில் சிரமம் ஏற்பட்டு விபத்து உண்டாக வாய்ப்பு உள்ளது. அதேபோல் பட்டாசு பேக்கிங் பிரிவுகளை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

இதைதொடர்ந்து சிவகாசி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசகன் பேசும்போது, அரசு விதிக்கும் விதிகளை கடைப்பிடித்தால் மட்டுமே விபத்தை தவிர்க்க முடியும். சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் சப்ளை ஆகிறது. விபத்து இல்லாத தீபாவளியை நாம் கொண்டாட பட்டாசு வியாபாரிகள் மிகவும் கவனத்துடன் பட்டாசு பண்டல்களை கையாள வேண்டும் என்றார்.

கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story