கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் கைது பரபரப்பு தகவல்கள்


கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் கைது பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 13 Oct 2018 11:15 PM GMT (Updated: 13 Oct 2018 10:14 PM GMT)

தக்கலை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் தக்கலை அருகே பள்ளியாடி பேராணிவிளையை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40), கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி சுதா (37). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ராஜசேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு ஊருக்கு வந்த அவர், அதன் பின்பு திடீரென மாயமானார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சுதாவிடம் கேட்டனர். அப்போது, ராஜசேகர் வெளிநாட்டு வேலைக்கு மீண்டும் சென்று விட்டதாக சுதா கூறி வந்துள்ளார். ஆனால், ராஜசேகர் அதன் பின்பு ஊருக்கு திரும்பி வரவில்லை. இதனால் சுதா மீது அவருடைய அண்ணன் ரவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ராஜசேகர் மாயமானது தொடர்பாக அவர் சுதாவிடம் கேட்டார். அப்போது, சுதாவும், அதே பகுதியை சேர்ந்த செல்வின் ராபர்ட் என்பவரும் சேர்ந்து ரவியை தாக்கினர்.

இதையடுத்து தங்கை சுதா மீது ரவிக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. எனவே ராஜசேகர் மர்மமான முறையில் மாயமாகி இருப்பதாக கூறி அவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு கடந்த 2007-ம் ஆண்டு ராஜசேகர் பேராணிவிளை பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்த போது, சுதாவும், கள்ளக்காதலன் ஆன்றனி ஷிபுவும் சேர்ந்து ராஜசேகரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, பிணத்தை வீட்டின் பின் பகுதியில் உள்ள கழிவறை தொட்டியில் வீசி மூடிவிட்டது தெரிய வந்தது.

இதையடுத்து 17-2-2018- அன்று தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராதா தலைமையில் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் கொலை நடந்த வீட்டுக்குச் சென்றனர். கழிவறை தொட்டி திறக்கப்பட்டு, ராஜசேகரின் உடலின் பாகங்களும், எலும்புகளும் சேகரித்து எடுக்கப்பட்டன.

இதுகுறித்து சுதாவிடம் விசாரணை நடத்திய போது அது ராஜசேகரின் எலும்புகூடு இல்லை எனக்கூறினார். இதையடுத்து போலீசார் எலும்புகூட்டை கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் அண்ணன் ரவியை தாக்கியதாக சுதாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்தநிலையில், தடயவியல் சோதனை முடிவு தற்போது வெளியாகியது. அதில் இறந்தவர் தொழிலாளி ராஜசேகர்தான் என்பதும், அவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதும் உறுதியானது. இதையடுத்து தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் சுதாவை தேடி வந்தனர்.

நேற்று தக்கலை பஸ் நிலையத்தில் வைத்து சுதாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலையில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. அவர்களை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Next Story