அ.தி.மு.க. ஆட்சி மீது அவதூறு பரப்ப தி.மு.க. எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க தயார் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு


அ.தி.மு.க. ஆட்சி மீது அவதூறு பரப்ப தி.மு.க. எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க தயார் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
x
தினத்தந்தி 13 Oct 2018 11:15 PM GMT (Updated: 13 Oct 2018 7:27 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சி மீது அவதூறு பரப்ப தி.மு.க. எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க தயார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

பேரூர்,

தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை கண்டித்து கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பேரூர் மேற்கு ரதவீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு அவைத்தலைவர் ஏ.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். எஸ்.எம்.உசேன் வரவேற்றார்.

இதில், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பேசியதாவது:–

அ.தி.மு.க. அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை பொறுக்க முடியாமல் தி.மு.க.வினர் அவதூறு பரப்புகிறார்கள். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள்.

கோவை மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். காந்திபுரம் மேம்பாலம், உக்கடம் மேம்பாலம், பாலக்காடு, சிறுவாணி சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தி உள்ளோம். கோவை நகருக்கு மெட்ரோ ரெயில் திட்டம், அவினாசி ரோடு மேம்பாலம் உள்ளிட்ட பணிகள் விரைவில் நடைபெற உள்ளது. தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு ரூ.33 கோடி வரை டெண்டர் போட்டுள்ளனர்.

ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் சாலைப்பணிகளுக்கு குறைந்த செலவில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் 4,900 எம்.எல்.டி. அளவுக்குதான் குடிநீர் திட்டப்பணிகளை மேற்கொண்டனர். அ.தி.மு.க. ஆட்சியில் 24 ஆயிரம் எம்.எல்.டி. அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப் பட்டு குடிநீர் வினியோக பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.

தி.மு.க. ஆட்சியின்போது ரூ.9,838 கோடி மதிப்பில்தான் சாலைப்பணிகளை மேற்கொண்டனர். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.26,400 கோடிக்கு சாலைப்பணிகளை மேற்கொண்டுள்ளோம். அ.தி.மு.க. ஆட்சி மீது காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு போடுகிறார்கள். தி.மு.க. எத்தனை வழக்கு போட்டாலும் அதை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

ஆனால் தி.மு.க. தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் துரோகம் செய்தது. கச்சத்தீவை தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தனர். காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நலன் காக்க தி.மு.க. ஆட்சி தவறிவிட்டது. 2ஜி. ஊழல் அவர்கள் மீது சுமத்தப்பட்டது. இலங்கையில் போர் நடந்தபோது, மத்திய காங்கிரஸ் ஆட்சிக்கு தி.மு.க. ஆதரவு அளித்ததால் தான் இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அ.தி.மு.க. ஆட்சி 2021 வரை நீடிக்கும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story