கூடலூரில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 4 பேர் கைது


கூடலூரில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 4 பேர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2018 11:00 PM GMT (Updated: 13 Oct 2018 7:41 PM GMT)

கூடலூரில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கூடலூர்,

கூடலூர் வனப்பகுதியில் சந்தனம், ரோஸ்வுட், வெண்தேக்கு, ஓமம் உள்பட விலை உயர்ந்த மரங்கள் உள்ளது. இதனால் கேரளா– கர்நாடகா மற்றும் தமிழக எல்லைகள் இணையும் பகுதியில் வனத்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் பல இடங்களில் நின்றிருந்த சந்தன மரங்களை இரவு நேரத்தில் மர்ம கும்பல் வெட்டி கடத்தி சென்றது. இது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கூடலூர் ஆவின் பால் வளாகம், கோத்தர்வயல் பகுதியில் கடந்த வாரம் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது. இது குறித்து கூடலூர் வன அலுவலர் ராகுல் உத்தரவின் பேரில் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையில் வனவர் ரவிச்சந்திரன், வன காப்பாளர்கள் பிரகாஷ், சங்கர், பிரதீப் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த வனத்துறை தனிப்படையினர் நேற்று முன்தினம் தனித்தனியாக மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றனர். அப்போது இரவு 2 மணிக்கு கூடலூர் சின்னப்பள்ளிவாசல் தெருவில் இருந்து கோத்தர்வயலுக்கு செல்லும் சாலையில் சந்தேகப்படும்படி 4 பேர் நடந்து வந்து கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் கையில் மரக்கட்டைகள் வைத்திருந்தனர்.

வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்த முயன்றனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நபர்கள் மரக்கட்டைகளை போட்டு விட்டு இருள் சூழ்ந்த பகுதிக்குள் தப்பி ஓடினர். இதனால் அவர்களை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். மேலும் அந்த கும்பல் விட்டு சென்ற மரக்கட்டைகளை வனத்துறையினர் ஆய்வு செய்தபோது சந்தன மரங்கள் என தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் நாலாபுறமும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது வேவ்வேறு இடங்களில் பதுங்கி இருந்த 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கூடலூர் ஈட்டிமூலா வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கூடலூர் பகுதியில் பல இடங்களில் வளர்ந்து இருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்தியது தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்த சந்தன மரக்கட்டைளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கூடலூர் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கர்நாடகா மாநிலம் குடகு பகுதியை சேர்ந்த லிங்கராஜ் (வயது 25), அஜிஷ் (43), கூடலூர் 1–ம் மைல் பகுதியை சேர்ந்த ஓஜீர் (39), ஜைனூல்ஆபிது (35) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இது குறித்து வனச்சரகர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:–

கைது செய்யப்பட்டவர்கள் சந்தன மரங்களை வெட்டி கர்நாடகாவுக்கு கடத்தி அங்கு ஒரு கிலோ ரூ.2 ஆயிரம் என விற்பனை செய்து வந்துள்ளனர். இதேபோல் கூடலூர் பகுதியில் 7 கிலோ வரை சந்தன கட்டைகளை வெட்டி கடத்தி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் எச்சரித்து உள்ளார்.


Next Story