மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயி அடித்துக் கொலை


மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயி அடித்துக் கொலை
x
தினத்தந்தி 13 Oct 2018 10:45 PM GMT (Updated: 13 Oct 2018 8:29 PM GMT)

மூங்கில்துறைப்பட்டு அருகே திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் விவசாயியை அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு,

திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் விவசாயியை, மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கொடியனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன் (வயது 60), விவசாயி. இவரது மனைவி கொடிசி(52). இவர்களுக்கு கோபி(35), ராஜீவ்காந்தி(32), குமார்(29), உதயசூரியன்(26), சின்னகவுண்டர்(25) என்ற 5 மகன்கள் உள்ளனர்.

இவர்களில் குமார், உதயசூரியன் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கோபி, ராஜீவ்காந்தி, சின்னகவுண்டர் ஆகிய 3 பேருக்கும் திருமணம் ஆகவில்லை.

கோபி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கோபி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அதன் பிறகு அவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இதற்கிடையே அவர் தனது பெற்றோரிடம் தனக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்கும்படி கூறி வற்புறுத்தினார். அதற்கு அவர்கள் விரைவில் பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கோபிக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என தெரிகிறது. இதனால் கோபி தனது பெற்றோரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோபி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் தனது தந்தை கந்தனிடம் எனக்கு 35 வயதாகிறது, அதனால் உடனே பெண் பார்த்து திருமணம் செய்து வையுங்கள் என்று கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

அப்போது கோபி, கந்தனின் தலையை பிடித்து சுவரில் வேகமாக அடித்ததாக தெரிகிறது. இதில் கந்தன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கந்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் முருகேசன், வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, கந்தனின் உடலை பார்வையிட்டு அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிந்து கோபியை கைது செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.



Next Story