வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்


வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
x
தினத்தந்தி 13 Oct 2018 10:45 PM GMT (Updated: 13 Oct 2018 9:26 PM GMT)

அஞ்செட்டி அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் மர்ம நபர்கள் சிலர் வனவிலங்குகளை வேட்டையாட செல்வதாக அஞ்செட்டி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரக அலுவலர் ரவி தலைமையில், வனத்துறையினர் காப்புக்காடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வனப்பகுதியில் மர்மநபர்கள் சிலர் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தனர். அவர்கள் வனத்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர். அதில் ஒருவரை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் அஞ்செட்டி அருகே உள்ள சேசுராஜபுரம் கிராமத்தை சேர்ந்த மதலைமுத்து (வயது 47) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கியுடன் வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி, 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து மதலைமுத்துவை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மர்மநபர்களை வனத்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story