திண்டுக்கல் அருகே துணிகரம்: பெண்களை தாக்கி 9 பவுன் நகைகள், பணம் கொள்ளை


திண்டுக்கல் அருகே துணிகரம்: பெண்களை தாக்கி 9 பவுன் நகைகள், பணம் கொள்ளை
x
தினத்தந்தி 13 Oct 2018 10:30 PM GMT (Updated: 13 Oct 2018 10:10 PM GMT)

திண்டுக்கல் அருகே, பெண்களை தாக்கி 9 பவுன் நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தாடிக்கொம்பு,

பெண்களை தாக்கி 9 பவுன் நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டி பாக்கியலட்சுமி நகரை சேர்ந்தவர் லட்சுமிஅம்மாள் (வயது 80). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு உதவியாக பொன்செல்வி (40) என்பவர் உடன் வசித்து வருகிறார். நேற்று மதியம் 2 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அதில், ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். மற்ற 2 பேர், வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் லட்சுமி அம்மாளையும், பொன்செல்வியையும் தாக்கியதுடன் கத்தியை காட்டி மிரட்டினர்.

மேலும் அவர்கள் அணிந்திருந்த 9 பவுன் நகைகள் மற்றும் பீரோவில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் லட்சுமி அம்மாள் புகார் செய்தார். அதன் பேரில், பெண்களை தாக்கி நகைகள், பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Next Story