சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: இந்து முன்னணி, அய்யப்ப பக்தர்கள் பேரணி


சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: இந்து முன்னணி, அய்யப்ப பக்தர்கள் பேரணி
x
தினத்தந்தி 14 Oct 2018 11:00 PM GMT (Updated: 14 Oct 2018 5:16 PM GMT)

அனைத்து பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வலியுறுத்தி திருவள்ளூரில் இந்து முன்னணி, அய்யப்ப பக்தர்கள் பேரணி நடத்தினர். மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோவில் வளாகம் முன்பு நேற்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட இந்து முன்னணி மற்றும் அய்யப்ப பக்தர்கள் சார்பில் அனைத்து பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது.

இதற்கு இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் வினோத்கண்ணா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகுநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக இந்து முன்னணியின் மாநில செயலாளர் மனோகர், கோட்ட செயலாளர் பொண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

இதற்கிடையே அய்யப்ப பக்தர்கள், இந்து முன்னணியினர் என 100-க்கும் மேற்பட்டவர்கள் பேரணியாக சென்றார்கள்.

அப்போது அவர்கள் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யப்ப சாமியின் படத்தை வாகனத்தின் மேல் வைத்து வழிநெடுகிலும் சாமியே சரணம் அய்யப்பா என கோஷங்களை எழுப்பியவாறு பஜார் வீதி, தேரடி, குளக்கரை வழியாக வந்தனர்.

இறுதியில் காமராஜர் சிலை அருகே இந்த பேரணி முடிவடைந்தது. அங்கு அவர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த திருவேங்கடாபுரம் கிராமத்தில் அகில பாரத அய்யப்பா சேவா சங்கத்தின் சார்பில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜானகிராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், நந்தன் மற்றும் குருசாமிகள், பக்தர்கள், பொதுமக்கள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பேரணியாக சென்று பொன்னியம்மன் கோவிலுக்கு வந்து கண்டன உரையாற்றினார்கள்.

இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இருந்து தேரடி தெரு, காந்தி தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக பூதபுரி தர்ம சாஸ்தா கோவில் வரை கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

பின்னர் பேரணியில் கலந்து கொண்ட அய்யப்ப பக்தர்களின் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் 50 வயது முடியும் வரை சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வர மாட்டோம் என சத்தியப்பிரமாணம் செய்து வழிபட்டனர்.

Next Story