தஞ்சையில் அரசு கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


தஞ்சையில் அரசு கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 14 Oct 2018 11:00 PM GMT (Updated: 14 Oct 2018 7:14 PM GMT)

தஞ்சையில் அரசு கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மண்டல அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். தஞ்சை மண்டல தலைவர் ராஜராஜன், செயலாளர் கோவிந்தராசு, துணைத்தலைவர் நிலாவழகன், இணை செயலாளர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உண்ணாவிரதப்போராட்டத்தில், கிராமப்புற கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க விரைவில் ஆசிரியர் நியமிக்க வேண்டும். தர ஊதியம் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை பெறுவதற்கான அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும். எம்.பில், பி.எச்டி முடித்தவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

2015-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முழு தகுதிச்சான்று, பணிவரன்முறை ஆணை வழங்க வேண்டும். உறுப்புகல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி அரசாணை வெளியிட வேண்டும். அரசு கல்லூரிகளின் பாதுகாப்புக்கென அறிவிக்கப்பட்ட சுற்றுச்சுவர் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டு ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பன்னீர்செல்வம், ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் கிட்டு, பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், மண்டல செயலாளர் சேவியர்செல்வகுமார், பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் இளமுருகு, அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கோதண்டபாணி ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர்.

முடிவில் தஞ்சை மண்டல பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Next Story