தமிழக அரசு மீது மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள் கமல்ஹாசன் பேச்சு


தமிழக அரசு மீது மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள் கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 14 Oct 2018 9:45 PM GMT (Updated: 14 Oct 2018 10:35 PM GMT)

தமிழக அரசு மீது மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள் என்று ராசிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

ராசிபுரம், 

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து உரையாடினார். இதன்படி சேலம் மாவட்டம் மல்லூருக்கு நேற்று மாலை 4 மணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வந்தார். அப்போது, அங்கு திரண்டிருந்த கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் காரில் நின்றபடி அவர் பேசும் போது கூறியதாவது:-

பனமரத்துப்பட்டி ஏரி பகுதி ஒரு காலத்தில் சினிமா சூட்டிங்கிற்கு புகழ்பெற்று விளங்கியது. ஆனால் இப்போது அந்த ஏரியின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக் கிறது. வரும் காலங்களில் ஏரி இருக்குமா? இருக்காதா? என்ற நிலைமை வந்துவிடும். ஏரியை தூர்வாரி தண்ணீரை நிரப்ப வேண்டியது அரசின் கடமை. ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். பனமரத்துப்பட்டி ஏரியை நாம் எல்லோரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் மட்டுமின்றி எப்போதும் உங்களை சந்திக்க நான் வருவேன். நாளைய புதிய தமிழகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களுக்கு உண்டு. நாளைய சிற்பிகள் இந்த கூட்டத்தில் இருக்கிறார்கள். நமக்கு இன்னும் நிறைய வேலைகள் இருக்கிறது. குறுகிய கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதை நாம் நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும். நாளையை நோக்கி தமிழகம் நகர்ந்து கொண்டு இருக்கிறது.

தெருவில் நின்று பேசுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். உங்களது அன்பு ஊட்டச்சத்தாக மாறிக்கொண்டு இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி மெதுவாக வளர்ந்து உங்கள் கட்சியாக மாறிக்கொண்டு இருப்பதை நான் கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன். பெரிய மேடை, ஆடம்பரம் எதுவும் இல்லாமல் நமது உரையாடல் நடக்கிறது. அது தொடர்ந்து நடைபெறும். நாளை நமதே என்பதை உண்மையாக்க வேண்டும் என்றால் இன்று முதல் உழைக்க தொடங்க வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

ராசிபுரம்

இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ்நிலையத்துக்கு சென்ற கமல்ஹாசன், அங்கு பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

எனக்கு ராசிபுரம் புதிது அல்ல. நற்பணி மன்றத்தினர், தொண்டர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள். 3 தலைமுறை தொண்டர்களும், இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் குடும்பத்தின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது. ராசிபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ரத்ததான முகாமை நற்பணி மன்ற நிர்வாகிகள் தொடர்ந்து சிறப்புடன் நடத்தி வருகிறார்கள். என்னுடன் 17 வயதில் நற்பணிகளை ஆரம்பித்தவர்கள், இப்போது அதே உற்சாகத்துடன் செயல்பட்டு வருவது பெருமையாக உள்ளது.

ராசிபுரத்தில் 3 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துகிறோம் என்று கூறி ஆங்காங்கே தோண்டப்பட்ட குழிகளால் சாலைகள் மோசமாக காணப்படுகிறது. இதுவே அரசின் மெத்தன போக்கை காட்டுகிறது. இப்படிப்பட்ட அரசு ஒதுங்கி இருக்க வேண்டும்.

தமிழக அரசு மீது மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை என்னால் கண்கூட பார்க்க முடிகிறது. நான் போகும் இடமெல்லாம், வாய்ப்பு வந்தால் நாங்கள் யார் என்று காட்டுகிறோம் என்று பொதுமக்கள் கோபத்திலும், பொறுமையுடனும் இருக்கிறார்கள். அதற்கான காலம் வந்துவிட்டது. குருசாமிபாளையம், அத்தனூர் பகுதியில் நெசவு தொழில் முடங்கி கிடப்பதாக எங்களுக்கு சேதி வந்து கொண்டு இருக்கிறது. அதை சரி செய்யும் காலம் விரைவில் வரும்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

அதைத்தொடர்ந்து புதுச்சத்திரம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசும்போது, புதுச்சத்திரம் பகுதியில் கிராம சபை கூட்டம் நடந்ததே கிடையாது என்று கூறுகிறார்கள். அது சரியாக நடக்க வேண்டும். பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு எப்படி பலம் இருக்கிறதோ? அதே பலம் கிராம சபை கூட்டத்துக்கும் உண்டு.

கிராம சபை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். ஒருவேளை கிராம சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சரிவர செயல்படுத்தவில்லை என்றால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்து போராட்ட களத்தில் குதிக்கும். அந்த போராட்டம் அமைதியாகவும், நியாயமாகவும் இருக்கும். புதிய தமிழகத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும், என்றார்.

Next Story