குழு அமைத்து நிதி வசூல் செய்து முறைகேடு: கவர்னர் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


குழு அமைத்து நிதி வசூல் செய்து முறைகேடு: கவர்னர் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 16 Oct 2018 12:00 AM GMT (Updated: 15 Oct 2018 8:47 PM GMT)

குழு அமைத்து தொழிற்சாலைகளில் நிதி வசூலித்து முறைகேடு செய்துள்ளனர். இதுகுறித்து கவர்னர் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவையில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

கவர்னர் கிரண்பெடிக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு இருந்து வருகிறது. மாநில வளர்ச்சிப்பணிகளுக்காக தனியார் தொழிற்சாலை, நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் வழங்கும் சமூக பொறுப்புணர்வு நிதியினை (சி.எஸ்.ஆர்.) கவர்னர் கிரண்பெடி தவறாக கையாளுவதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமீபத்தில் குற்றஞ்சாட்டி இருந்தார். இதை கிரண்பெடி மறுத்தார்.

இந்தநிலையில் நேற்று நிருபர்களிடம் பேசிய முதல்- அமைச்சர் நாராயணசாமி மீண்டும் கவர்னர் மீது புகார் தெரிவித்து உள்ளார். பேட்டியின் போது முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

கவர்னர் அலுவலகத்தில் சமூக பொறுப்புணர்வு நிதியை பெறவில்லை. அதுசம்பந்தமாக யாரையும் தொடர்புகொள்ளவில்லை. நிதி வழங்குபவர்கள் தானாக முன்வந்து கொடுத்தார்கள் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார். அரசியல் சட்டத்தில் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு என்னென்ன பணி என்பது குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது.

தனிநபர், நிறுவனங்கள் தானாக முன்வந்து பொதுத்தொண்டுகளுக்கு நிதி கொடுக்கிறார்கள் என்றால் அதற்கும் விதிமுறை உள்ளது. அவ்வாறு நிதியை பெறுவதற்கான குழுவின் தலைவராக முதல்-அமைச்சரும், உறுப்பினர்களாக தலைமை செயலாளர், 4 செயலாளர்களும் உள்ளனர். அந்த குழுவிடம்தான் நிதியை வழங்க வேண்டும். அதனை எப்படி செலவிடுவது என்பதை அந்த குழுதான் முடிவு செய்யும்.

தற்போது சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்காக பெறப்பட்ட நிதி தொடர்பாக எனது கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை. இதற்காக கவர்னர் அலுவலகத்தில் இருந்து கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிறப்பு பணி அதிகாரி என்று தேவநீதிதாஸ் கையெழுத்திட்டு அரசு செயலாளர்கள் மற்றும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கு அதை அனுப்பி உள்ளார்.

அதில் கவர்னர் அலுவலக அதிகாரிகள் ஆஷா குப்தா, பாஸ்கரன் ஆகியோரை கொண்டு சமூக பொறுப்புணர்வு நிதியை வசூலிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையில் அமைக்கப்பட்ட இந்த குழுவினர் பல தொழில் அதிபர்களை, தொழிற்சாலைகளை டெலிபோனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளனர்.

சில திட்டங்களை கவர்னர் மாளிகையே நேரடியாக செயல்படுத்தி உள்ளது. இதற்காக ஒப்பந்ததாரர்களையும் அவர்களே முடிவு செய்துள்ளனர். ஆனால் யாரிடமும் நிதி பெறவில்லை என்று கவர்னர் கூறியுள்ளார். ஆனால் செல்வகணபதி எம்.எல்.ஏ. கவர்னரிடம் தனது சம்பளத்தை வழங்கிய செய்தி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. இப்படி இருக்க யாரிடமும் நிதிபெறவில்லை என்று கவர்னர் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்.

கவர்னர் மாளிகை குழுவிடம் நிதி கொடுத்தவர்கள் விவரம், சமூக பொறுப்புணர்வு நிதி வசூலிக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளதா? என்பது பற்றி கவர்னர் விளக்க வேண்டும். எனக்கு கவர்னர் மீது தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி எதுவும் கிடையாது. மற்றவர்களின் அதிகாரத்தில் யாரும் தலையிடக்கூடாது.

சமூக பொறுப்புணர்வு நிதி தர முன்வருபவர்களில் சிலர் மீது குற்றப்பின்னணி இருக்கும். சிலர் சலுகையை எதிர்பார்ப்பார்கள். முதல்- அமைச்சர் தலைமையிலான கமிட்டி அதையெல்லாம் பார்க்கும். யார் கொடுத்தாலும் நிதியை பெற்றுக் கொள்வதில்லை. அப்படி செய்தால் முரண்பாடாகி விடும். ஆனால் இந்த விவகாரத்தில் குழு அமைத்து நிதி வசூலித்து கவர்னர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

மணவெளி தொகுதியில் ஒரு பள்ளியில் ரூ. 7 லட்சம் வாங்கி உள்ளார்கள். அந்த பள்ளி 12-ம் வகுப்பு தொடங்க அனுமதி கேட்டுள்ளது. அந்த பணம் என்னவானது? கவர்னர் மாளிகைக்கு ஏதாவது அழைப்பு கொடுக்க வந்தால்கூட பணம் கேட்கிறார்கள். கவர்னர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஓட்டலில் இருந்து சாப்பாடு கொடுக்க முடியுமா? என்று கேட்கிறார்கள்.

சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் வசூல் செய்யப்பட்ட ரூ.80 லட்சம் பணம் எங்கே போனது? அரசு இடத்தில் வேலை செய்தால் அதற்கு டெண்டர்விட வேண்டும். அதற்கான நிதி சம்பந்தப்பட்ட துறை மூலம்தான் வழங்கப்படவேண்டும். 84 கி.மீ. தூர்வாரப்பட்டது என்று கவர்னர் கூறுகிறார். இதற்கு காண்டிராக்ட் விட்டது யார்? இந்த பணிகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர், செயலாளர் அனுமதி கொடுத்தனரா? சம்பந்தப்பட்ட துறை செயலாளரை கேட்டால் ஒரே ஒரு பணிக்கு மட்டும் அனுமதி கேட்டதாகவும், மற்ற பணிகளை கவர்னர் மாளிகை அதிகாரிகளே எடுத்து செய்வதாகவும் தெரிவித்தார். இது என்ன தனியார் கம்பெனியா?

கவர்னர் மாளிகை பணம் வசூலிக்கும் அமைப்பாக மாறிவிட்டது. நானும், அமைச்சர்களும் எங்களது பணிகளை சரியாக செய்து வருகிறோம். கவர்னர் அலுவலகத்தில்தான் கோப்புகள் தேங்கி உள்ளன. கவர்னர் முதலில் அவரது வேலையை செய்யட்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவர்னர் தலையிடக்கூடாது.

இந்த விஷயத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது அமைச்சர் நடவடிக்கை எடுப்பார். மிகப்பெரிய முறைகேடு கவர்னருக்கு தெரிந்தே நடந்துள்ளது. இதற்கு கவர்னர் முழு பொறுப்பேற்க வேண்டும். கவர்னர் மாளிகை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் நேரடியாக நான் நடவடிக்கை எடுக்க முடியாது. இதுதொடர்பாக நீதி விசாரணை வைக்கவேண்டும். இதுதொடர்பாக உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி விசாரிக்க சொல்வேன்.

கவர்னரின் செயலாளராக விதிமுறைகளை மீறி தேவநீதிதாசை சிறப்பு பணி அதிகாரியாக கவர்னர் நியமித்துள்ளார். அலுவலகத்தில் அமர்ந்து அவர் கோப்புகளை பார்ப்பது, அதிகாரிகளை அழைத்து கூட்டம்போடுவது, உத்தரவிடுவது என செயல்படுகிறார். கவர்னர் உள்பட யார் மீதும் எனக்கு பொறாமை கிடையாது.

சமூக பொறுப்புணர்வு நிதிக்கும் கவர்னர் மாளிகைக்கும் தொடர்பு இல்லை என்று கூறிவிட்டு ‘ஹெல்ப் டெஸ்க்’ என்ற ஒன்றை அமைத்து யாரிடம் பேரம் பேசுகிறீர்கள். பதவிக்கு உரிய தகுதியை கவர்னர் இழந்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story