30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரே‌ஷன்கடை பணியாளர்கள் 2–வது நாளாக ஆர்ப்பாட்டம்


30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரே‌ஷன்கடை பணியாளர்கள் 2–வது நாளாக ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2018 11:00 PM GMT (Updated: 16 Oct 2018 5:11 PM GMT)

30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரே‌ஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில் 2–வது நாளாக தஞ்சையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு ரே‌ஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று 2–வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ராமலிங்கம், மாநில இணை செயலாளர் ராமலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் இளவரசன், மாவட்ட இணை செயலாளர் சுந்தரேசன், தஞ்சை வட்ட தலைவர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ராமச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பொது வினியோகத் திட்டத்திற்கென தனித்துறை அமைக்க வேண்டும். கூட்டுறவுத்துறை ரே‌ஷன்கடை பணியாளர்களுக்கு நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் பொட்டலமாக வழங்க வேண்டும். ரே‌ஷன்கடைகளில் பணியாளர்களின் முன்பு கட்டுப்பாட்டு பொருட்கள் அனைத்தையும் எடையிட்டு வழங்க வேண்டும்.


பொதுவினியோக திட்டப்பணிகள் முழுவதும் பயோமெட்ரிக், டிஜிட்டல் ரே‌ஷன்கார்டு வழங்குதல் உள்ளிட்டு பயோமெட்ரிக் மின்னணு குடும்ப அட்டை வழங்குதல் உள்ளிட்ட அனைத்தையும் 100 சதவீதம் கணினி மயமாக்க வேண்டும். பணிவரன் செய்யப்படாத பணியாளர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி பணிவரன் செய்ய வேண்டும். ரே‌ஷன்கடை பணியாளர்கள் அவர்கள் வாங்கும் கடைசி மாத ஊதியத்தில் சரிபாதியை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்ய நிர்ப்பந்தம் செய்ய கூடாது என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ரே‌ஷன்கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தற்காலிக பணியாளர்களை கொண்டு பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன.

Next Story