பொறையாறு பகுதியில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்


பொறையாறு பகுதியில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
x
தினத்தந்தி 16 Oct 2018 10:30 PM GMT (Updated: 16 Oct 2018 7:14 PM GMT)

பொறையாறு பகுதியில் சம்பா சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பொறையாறு,

கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்திற்கு தேவையான காவிரி நீர் கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் நெற்பயிர்கள் சாகுபடி செய்ய சிரமப்பட்டனர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து காவிரிநீர் திறக்கப்பட்டதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியதாலும் ஆறுகளில் தண்ணீர் செல்கிறது. இதனால் பொறையாறு, காட்டுச்சேரி, தில்லையாடி, திருவிடைக்கழி, விசலூர், கீழ்மாத்தூர், மேமாத்தூர், திருவிளையாட்டம், எராவாஞ்சேரி, இலுப்பூர், நல்லாடை, அரசூர், கொத்தங்குடி, காழியப்பநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சம்பா சாகுபடி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தரங்கம்பாடி கடைமடை பகுதியில் சில ஆண்டுகளாக காவிரிநீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய சிரமப்பட்டு வந்தோம். விவசாய கூலி தொழிலாளர்களும் மற்ற வேலைகளுக்கு சென்று விட்டனர். நடப்பாண்டு காவிரி நீர் உரிய நேரத்தில் வந்ததை தொடர்ந்து சம்பா நடவு செய்யும் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். கடைமடை பகுதியில் நிலத்தடிநீர், உப்பு நீராக உள்ளதால் நாங்கள் காவிரிநீரை நம்பி தான் ஒருபோகமாவது சாகுபடி செய்ய முடியும். ஒவ்வொரு ஆண்டும் உரிய நேரத்தில் காவிரிநீர் கடைமடை பகுதிக்கு கிடைத்தால் அனைத்து விவசாயிகளும் சாம்பா பயிர் சாகுபடி செய்து நெல் உற்பத்தியை பெருக்க வசதியாக இருக்கும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story