கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா ஏராளமான பக்தர்கள் தரிசனம்


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா ஏராளமான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 17 Oct 2018 10:30 PM GMT (Updated: 17 Oct 2018 8:54 PM GMT)

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

கரூர்,

கரூரில் முன்பு புகழ்சோழன் என்ற மன்னன் ஆட்சி செய்தான். அப்போது வாழ்ந்த சிவகாமி ஆண்டார் என்கிற முனிவர் கரூர் நகராட்சி மேல்நிலைபள்ளி அருகேயுள்ள இடத்தில் இருந்த நந்தவனத்தில் பூக்களை பறித்து கொண்டு வந்து கரூர் பசுபதீஸ்வரரை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஒரு நாள் புகழ் சோழன் மன்னனது பட்டத்து யானையை அமராவதி ஆற்றில் குளிப்பாட்டி விட்டு அழைத்து வந்து கொண்டிருந்த போது திடீரென யானை பிளிறி கொண்டு ஓடியது. அப்போது சிவகாமி ஆண்டார் பூக்குடலையை எடுத்து கொண்டு சிவனுக்கு படைக்க வந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் யானையானது பூக்களை தட்டி விட அது தரையிலிருந்த மண்ணில் விழுந்தது. கோவிலில் தவம் புரிந்து கொண்டிருந்த 63 நாயன்மார்களுள் ஒருவரான எறிபத்த நாயனார் என்கிற சிவனடியார் இதனை அறிந்தார். சிவவழிபாட்டில் தடை ஏற்படுத்துவோரை தண்டிப்பதை தனது கடமையாக அவர் கொண்டிருந்தார். உடனே புறப்பட்டு சென்ற அவர், பூக்களை தட்டி விட்ட அந்த யானையின் தும்பிக்கையை மழு என்கிற ஆயுதத்தால் வெட்டினார்.

இதனை அறிந்த புகழ்சோழன் தனது படையை திரட்டி கொண்டு வந்தான். பின்னர் உண்மையை அறிந்ததும் தம்மையும் சேர்த்து வெட்டுமாறு மன்னன் வேண்டினான். அப்போது தோன்றிய இறைவன் யானையை உயிர்த்து எழ செய்தார். பூவின் பெருமையை உணர்த்துவதற்காகவே இந்த நாடகத்தை அரங்கேற்றியது தெரிந்தது. பின்னர் மன்னன், முனிவர் உள்ளிடடோர் மீது பூ மழை பொழிந்து அவர்களுக்கு அருள்பாலித்ததாக கூறப்படுகிறது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அப்போது சிவவழிபாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட பூக்குடலையை தட்டிவிட்ட யானையை தண்டிப்பது உள்ளிட்ட நிகழ்வுகள் தத்ரூபமாக விளக்கி காண்பிக்கப்படும். அதன்படி மகாஅஷ்டமி நாளான நேற்று எறிபத்த நாயானர் பூக்குடலை விழா கரூரில் கோலாகலமாக நடந்தது. கோவிலில் எறிபத்த நாயனார், புகழ் சோழநாயனார், சிவகாமி ஆண்டார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.

கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்பு விழாவுக்கான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. யானை வாகனம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. பின்னர் கரூர் டவுன் போலீஸ் நிலையம் அருகே நந்தவனத்தில் பூ பறித்து கொண்டு சிவகாமி ஆண்டார் நடந்து வருவது போலவும், அப்போது மதம் பிடித்து ஓடிய யானை பூக்குடலையை தட்டி விட்டவுடன் வேல்கம்பு உள்ளிட்டவற்றுடன் அந்த யானையை சிவபக்தர்கள் துரத்தி வருவது போலவும், பின்னர் விழாமேடையில் வைத்து மழு எனும் ஆயுதத்தால் எறிபத்த நாயனார் யானையின் தும்பிக்கை வெட்டியவுடன் அது கீழே சாய்வதையும் போல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் புகழ்சோழ மன்னர் வேடமணிந்த ஒருவர் தான் வைத்திருந்த வாளால் தன்னை வெட்டும்படி கேட்டு கொண்டார். அப்போது பசுவாகனத்தில் அலங்காரவள்ளியுடன் காட்சிதந்த பசுபதீஸ்வரர் இறந்த யானையை உயிர்த்தெழ செய்து பூமழை பொழிந்து ஆசீர்வாதம் செய்தார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தாங்கள் வைத்திருந்த பூக்களை தூவி வழிபட்டனர். மேலும் சிவ கோ‌ஷங்களை எழுப்பினர்.

அதனை தொடர்ந்து பூக்குடலைகள் புடைசூழ சிவகாமி ஆண்டார் முன்னே செல்ல, அதற்கு பின்னால் பசுபதீஸ்வரர்–அலங்காரவள்ளி, புகழ்சோழ மன்னருடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பூக்குடலையை கையில் குச்சியால் சுமந்தப்படி சென்றனர். பக்தர்களுக்கு வசதியாக கோவில் சார்பில் பூக்குடலைகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. மேலும் கடைகளிலும் விற்பனையானது. பக்தர்கள் பூக்களை வாங்கி வந்து அதில் வைத்து கையில் ஏந்தி சென்றனர். ஊர்வலம் மேள, தாளம் முழங்க சென்றது. சிவபக்தர்கள் பலர் நடனமாடிய படியும், சிவ பக்தி பாடல்களை பாடிய படியும் சென்றனர்.

ஊர்வலம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி ஜவகர் பஜார், மனோகரா கார்னர், காமாட்சியம்மன் கோவில், திண்ணப்பா கார்னர், அரசு மருத்துவமனை சாலை வழியாக கோவிலை வந்தடைந்தது. கோவிலில் வைக்கப்பட்டிருந்த பூக்குடலையில் பக்தர்கள் தங்களது இடர்கள் நீங்க வேண்டி கொண்டு வந்த பூக்களை சாற்றினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். எங்கு திரும்பினாலும் பக்தர்கள் தலையாக தென்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story