தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Oct 2018 10:30 PM GMT (Updated: 20 Oct 2018 8:39 PM GMT)

தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் வெங்கனூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கமலா (வயது 36). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சக்திவேல் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கமலா, குழந்தைகளுடன் அரியலூர் தாலுகாவிற்குட்பட்ட குந்தபுரத்தில் உள்ள தனது அக்காள் சித்ரா குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கமலா, சித்ரா குடும்பத்தினருடன் சேர்ந்து தூங்க சென்றார். அப்போது அவர்கள் கதவை தாழ்ப்பாள் போடாமல் தூங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மர்மநபர்கள் சித்ரா வீட்டிற்குள் திடீரென்று புகுந்தனர். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த கமலா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறிக்க முயன்றனர்.

இதனால் திடுக்கிட்டு எழுந்த கமலா சங்கிலியை கையில் பிடித்து கொண்டு திருடன், திருடன்... என சத்தம் போட்டார். ஆனாலும் மர்மநபர்கள் விடாமல் சங்கிலியை பிடித்து இழுத்தலில், சங்கிலி மர்மநபர்கள் கையில் சிக்கியது. பின்னர் அவர்கள் அங்கிருந்து ஓடினர். இதையடுத்து கமலா, அவரது சகோதரி சித்ரா, அவருடைய கணவர் நல்லதம்பி ஆகியோர் மர்மநபர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். ஆனால் மர்ம நபர்கள் வயல் பகுதி வழியாக மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து கமலா திருமானூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் மர்மநபர்கள் தாலி சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story