போலி ஆதார் அட்டை தயாரித்து வழங்கியதில் மேலும் ஒரு பீகார் வாலிபருக்கு தொடர்பு; தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்


போலி ஆதார் அட்டை தயாரித்து வழங்கியதில் மேலும் ஒரு பீகார் வாலிபருக்கு தொடர்பு; தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்
x
தினத்தந்தி 22 Oct 2018 11:00 PM GMT (Updated: 22 Oct 2018 4:26 PM GMT)

திருப்பூரில் கைதான வங்காளதேச வாலிபர்களுக்கு போலி ஆதார் அட்டை தயாரித்து வழங்கியதில் மேலும் ஒரு பீகார் வாலிபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

நல்லூர்,

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை மாநகர போலீசார் கைது செய்து வருகிறார்கள். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரக போலீசார் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி செவந்தாம்பாளையத்தில் தங்கியிருந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களுக்கு போலி ஆதார் அட்டை எடுத்து கொடுக்க பீகாரை சேர்ந்த ராம் ஷிசா வர்மா உதவியது தெரிவந்தது. தனிப்படை போலீசார் பீகாருக்கு சென்று அவரை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் அதில் தொடர்புடைய ரவிசங்கர் சிங்கை திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு உதவிய திருவண்ணாமலையை சேந்த சைமன் என்ற சபரிமுத்துவை அவினாசி ரங்காபாளையத்தில் கைது செய்தனர். இதுவரை மொத்தம் 11 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

வங்காளதேச வாலிபர்களுக்கு போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுப்பதற்கு உடந்தையாக மேலும் ஒரு வாலிபருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த மிதுன் (வயது 27) என்பதும், அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் இருந்து சொந்த ஊரான பீகார் மாநிலத்திற்கு சென்று தலைமறைவாகிவிட்டதும் தெரியவந்துள்ளது.

மிதுனை பிடித்தால் தான் போலி ஆதார் அட்டை எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த முழு விவரம் தெரியவரும். மிதுனை பிடிப்பதற்காக மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் உத்தரவுப்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விரைவில் பீகார் செல்ல திட்டமிட்டுள்ளனர்.


Next Story