பரமத்திவேலூர் பகுதிகளில் சோதனை: ரூ.13 லட்சம் குட்கா பறிமுதல்; 4 பேர் கைது


பரமத்திவேலூர் பகுதிகளில் சோதனை: ரூ.13 லட்சம் குட்கா பறிமுதல்; 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2018 11:00 PM GMT (Updated: 23 Oct 2018 8:55 PM GMT)

பரமத்திவேலூர் பகுதிகளில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பரமத்திவேலூர்,

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவ்வப்போது போலீசார் அதிரடி சோதனை நடத்தி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதிகளில் சரக்கு ஆட்டோக்களில் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாகவும், மேலும் குடோன்களில் பதுக்கி வைத்து இருப்பதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் இன்ஸ்பெக்டர் லட்சுமணகுமார், போலீசார் பரமத்திவேலூர் பகுதியில் நேற்று அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு நல்லிபாளையம் மற்றும் கல்லூரி சாலை சுண்டபனை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 சரக்கு ஆட்டோக்களை சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். அதில் மூட்டை, மூட்டையாக குட்கா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 42 மூட்டை குட்காவுடன் 2 சரக்கு ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக டிரைவர்கள் பரமத்திவேலூர் பாரதி நகரை சேர்ந்த கந்தசாமி மகன் விக்னேஷ் (வயது 22), கரூர் மாவட்டம் மண்மங்கலம் மோதுக்காடு பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் மதன்குமார் (24) மற்றும் பரமத்திவேலூர் நல்லியாம்பாளையம்புதூரை சேர்ந்த கந்தசாமி மகன் முத்துக்குமார் (39) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பாலப்பட்டி பகுதியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 36 மூட்டைகள் மற்றும் 6 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பரமத்தி வேலூர் கண்டர் தெருவைச் சேர்ந்த கோபால் மகன் விஜய் (எ) ராமலிங்கத்தை (35) மோகனூர் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான பரமத்திவேலூர் சக்ரா நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன்கள் தீனதயாளன் (34),ஜெகன் (32) ஆகியோரை பரமத்திவேலூர் போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் உத்தரவின் பேரில் பரமத்திவேலூர் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பாண்டி, ராஜா ஆகியோர் பரமத்திவேலூர் பஸ் நிலையம் பின்புறம் கந்தநகரில் உள்ள ஒரு குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 மூட்டை குட்காவை பறிமுதல் செய்து குடோனுக்கு சீல் வைத்தனர். குட்கா பாக்கெட்டுகளில் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக சென்னை உணவு பாதுகாப்பு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

குட்காவை பதுக்கி வைத்திருந்த குடோன் உரிமையாளர் பாண்டமங்கலத்தை சேர்ந்த சுந்தரம் மகன் தினேஷ்குமாரிடம் (28) விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்த குட்காவின் மதிப்பு சுமார் ரூ.13 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story