காவிரி டெல்டா மாவட்டங்களில் இறுதிக்கட்டத்தை எட்டியது சம்பா, தாளடி சாகுபடி 3½ லட்சம் எக்டேரை தாண்டியது


காவிரி டெல்டா மாவட்டங்களில் இறுதிக்கட்டத்தை எட்டியது சம்பா, தாளடி சாகுபடி 3½ லட்சம் எக்டேரை தாண்டியது
x
தினத்தந்தி 24 Oct 2018 10:45 PM GMT (Updated: 24 Oct 2018 5:46 PM GMT)

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதுவரை 3½ லட்சம் எக்டேர் வரை நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளன.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்(தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள்) டெல்டா பகுதி விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது வழக்கம்.

குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12–ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். குறிப்பட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி அதிக அளவில் நடைபெறும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.


இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12–ந் தேதி திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த பலத்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூலை மாதம் 19–ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் கல்லணைக்கு 22–ந் தேதி வந்து அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரைக்கொண்டு டெல்டா மாவட்டங்களில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 694 ஏரி, குளங்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு சொந்தமான குளங்களிலும் நீர் நிரப்பப்பட்டு சம்பா, தாளடி சாகுபடி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.


தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சம் எக்டேரில் சம்பாவும், 25 ஆயிரம் எக்டேரில் தாளடியும் என மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் எக்டேரில் சம்பாவும், 23 ஆயிரம் எக்டேரில் தாளடியும் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 500 எக்டேரிலும் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதே போல் நாகை மாவட்டத்தில் 94 ஆயிரத்து 450 எக்டேரில் சம்பாவும், 37 ஆயிரத்து 50 எக்டேரில் தாளடியும் என மொத்தம் 1 லட்சத்து 31 ஆயிரத்து 500 எக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 4 லட்சத்து 5 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாற்றங்கால் தயாரிக்கப்பட்டு நடவுப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. இது தவிர நேரடி நெல் விதைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.


நாகை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்து 739 எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளன. இதில் சம்பா மட்டும் 85 ஆயிரத்து 687 எக்டேரில் முடிவடைந்துள்ளன. தாளடி 30 ஆயிரம் எக்டேரில் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் அடுத்த மாதம்(நவம்பர்) 15–ந் தேதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 95 ஆயிரம் எக்டேரில் சம்பா, தாளடி நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளன. தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் போன்ற கடைமடை பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பெரும்பாலும் நடவுப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டன. பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் பகுதிகளில் 10 ஆயிரம் எக்டேர் வரை நடவுப்பணிகள் அடுத்த மாதம் 15–ந் தேதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 31 ஆயிரம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளன. இதில் சம்பா 1 லட்சத்து 18 ஆயிரம் எக்டேரிலும், தாளடி 13 ஆயிரம் எக்டேரிலும் முடிவடைந்துள்ளன. எஞ்சிய இடங்களில் நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அடுத்த மாதம் முதல்வாரத்துக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் தற்போது வரை 3½ லட்சம் எக்டேர் வரை நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளன. சம்பா, தாளடி சாகுபடி பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் அடுத்த மாதம் 15–ந் தேதிக்குள் நடவுப்பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story