தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது தம்பிதுரை பேட்டி


தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது தம்பிதுரை பேட்டி
x
தினத்தந்தி 24 Oct 2018 11:00 PM GMT (Updated: 24 Oct 2018 8:14 PM GMT)

தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது என்று தம்பிதுரை கூறினார்.

கரூர்,

கரூர் அருகே உள்ள குள்ளம்பட்டி கிராமத்தில், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு பாதிப்பு வராது. அது ஆட்சிக்கு உறுதுணையாகவும், வலிமை சேர்க்கும் வகையிலும் இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. ஆட்சி 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும். சி.பி.ஐ. உயர் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படுவது அந்த பிரிவு மீதான நம்பகத்தன்மையை மக்களிடத்தில் இழக்க செய்யும்.

மத்திய அரசின் ரெயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தமிழகத்திலும் கூட இந்தி பேசுபவர்கள் தான் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். கிழக்கிந்திய கம்பெனி நம்மை எப்படி அடிமைப்படுத்தியதோ அதேபோல் தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு பல்வேறு வகைகளில் பறிக்கிறது.

அந்த வகையில் தான் ஜி.எஸ்.டி., நீட் தேர்வு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டன. தமிழக அரசின் அதிகாரத்தை படிப்படியாக மத்திய அரசு எடுத்து கொண்டு வருகிறது. எனவே, வருகிற பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்டவற்றுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். சர்க்கசில் சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளை கட்டுப்படுத்தும் ‘ரிங் மாஸ்டர்‘ போல அ.தி.மு.க.வை மோடி கட்டுப்படுத்துகிறார் என ஸ்டாலின் கூறினார். அந்த வகையில் பார்த்தால் கருணாநிதியின் நினைவேந்தலுக்கு அழைப்பு விடுத்தது உள்ளிட்டவற்றின் கீழ் தி.மு.க.வின் ‘ரிங் மாஸ்டராக‘ பா.ஜ.க. தலைவர் அமித்ஷா செயல்படுவது தெரிகிறது. இதனை காலப்போக்கில் என்னால் நிரூபிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story