அர்ஜூன் மீதான பாலியல் புகார் விவகாரம்: நடிகர் சங்க தலைவர் அம்பரீஷ் தலைமையில் இன்று சமரச பேச்சுவார்த்தை


அர்ஜூன் மீதான பாலியல் புகார் விவகாரம்: நடிகர் சங்க தலைவர் அம்பரீஷ் தலைமையில் இன்று சமரச பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 24 Oct 2018 9:58 PM GMT (Updated: 24 Oct 2018 9:58 PM GMT)

நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் புகார் விவகாரம் குறித்து நடிகர் சங்க தலைவர் அம்பரீஷ் தலைமையில் இன்று சமரச பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

பெங்களூரு,

நடிகர் அர்ஜூன் ‘நிபுணன்‘ என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். இந்த படம் கன்னடத்தில் ‘விஸ்மய‘ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சுருதி ஹரிகரன் குற்றம்சாட்டினார். தன் மீதான இந்த குற்றசாட்டை அர்ஜூன் மறுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் நடிகை சுருதி ஹரிகரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கன்னட திரைப்பட வர்த்தக சபையில் நடிகர் அர்ஜூனின் மாமனார் புகார் கொடுத்தார். அதன் மீது திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அதில், நடிகர் சங்க தலைவர் அம்பரீஷ் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது.

சமரச பேச்சுவார்த்தை

அதன்படி நடிகர் சங்க தலைவர் அம்பரீஷ் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில் இன்று(வியாழக்கிழமை) மாலை 4 மணியளவில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக புகாருக்கு உள்ளாகி இருக்கும் அர்ஜூன் மற்றும் நடிகை சுருதி ஹரிகரன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அர்ஜூன் மீது கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டில் உறுதியாக இருப்பதாகவும், இது தொடர்பாக தன்னிடம் உள்ள ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்வேன் என்றும் சுருதி ஹரிகரன் நேற்று கூறினார்.

Next Story