திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா கவர்னர் பங்கேற்கிறார்


திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா கவர்னர் பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 25 Oct 2018 10:00 PM GMT (Updated: 25 Oct 2018 5:10 PM GMT)

சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்கின்றனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை),
திருவலம் அருகே சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 14-வது பட்டமளிப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு பல்கலைக்கழக அரங்கில் நடைபெறுகிறது.

இதுகுறித்து துணைவேந்தர் முருகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவுக்கு தமிழக கவர்னரும், திருவள்ளுவர் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சரும், இணைவேந்தருமான கே.பி.அன்பழகன் சிறப்புரையாற்றுகிறார்.

சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதியும், புதுச்சேரி அரசின் மனித உரிமைக்குழுவின் தலைவருமான மு.ஜெயச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.

தமிழக அரசின் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

விழாவில் நேரில் அனுமதிக்கப்பட்ட 106 பேருக்கு முனைவர் பட்டமும், 34 இளங்கலை மற்றும் 20 முதுகலை பட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளுடன் பட்டங்களும் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர்.

மேலும் 39 ஆயிரத்து 371 மாணவர்களில், 527 பட்டயப்படிப்பு மாணவர்களுக்கும், 30 ஆயிரத்து 737 இளங்கலை பயின்ற மாணவர்களுக்கும், 6 ஆயிரத்து 305 முதுகலை பயின்ற மாணவர்களுக்கும், 1,696 ஆய்வியல் நிறைஞர்கள், நேரில் அனுமதிக்கப்படாத மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட உள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் இருக்கை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகமும், தமிழக அரசின் வேலைவாய்ப்பு துறையும் இணைந்து பல்வேறு போட்டித்தேர்வுகளுக்காக மாணவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்கி வருகிறோம். வேலை வாய்ப்பு முகாம் நடத்தி சுமார் 50 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர்களும், ஆராய்ச்சி மாணவர்களும் பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் விலங்கியல்துறை பேராசிரியர் சிங்காரவேலு தனது கண்டுபிடிப்பிற்காக அறிவுசார் சொத்துரிமை பெற்றுள்ளார்.

இந்த பல்கலைக்கழகத்தின் பெயரில் வெளியிடப்பட்ட 76 போலி சான்றிதழ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பெருவழுதி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் பொருளாதார துறை தலைவர் தண்டபாணி, பேராசிரியர்கள் ஜெகதீசன், செந்தில்குமார், ராஜசேகர், க.சிங்காரவேலு மற்றும் பல்கலைக்கழக அலுவலர்கள், பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.

Next Story