புனேயில் சிலிண்டர் வெடித்து குடிசைகளில் தீ; 2 பேர் பலி


புனேயில் சிலிண்டர் வெடித்து குடிசைகளில் தீ; 2 பேர் பலி
x
தினத்தந்தி 25 Oct 2018 9:30 PM GMT (Updated: 25 Oct 2018 8:50 PM GMT)

புனேயில் சிலிண்டர் வெடித்து குடிசைகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் பலியாகினர்.

புனே, 

புனே, பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியில் தால்வி நகர் குடிசைப்பகுதி உள்ளது. இந்தநிலையில், அங்குள்ள ஒரு குடிசை வீட்டில் வைக்கப்பட்டிருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென வெடித்து சிதறியது. இதனால் அந்த குடிசை தீப்பிடித்து எரிந்தது. மேலும் அருகிலுள்ள குடிசை வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியது.

இந்தநிலையில் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். அவர்கள் குடிசைகள் தீப்பிடித்து எரிவதை பார்த்து வீடுகளை விட்டு அலறி அடித்து கொண்டு ஓடினர்.

தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த பயங்கர தீ விபத்தில் 5 குடிசைகள் எரிந்து நாசமாகின. மேலும் தீயில் சிக்கி பிரதீப் மோதே (வயது 38) மற்றும் சங்கர் சிர்சாகர் (35) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story