கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை புதிய வீட்டுக்கு குடிபுகும் தகராறில் விபரீத முடிவு


கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை புதிய வீட்டுக்கு குடிபுகும் தகராறில் விபரீத முடிவு
x
தினத்தந்தி 25 Oct 2018 10:15 PM GMT (Updated: 25 Oct 2018 9:40 PM GMT)

குமாரபாளையத்தில், புதிய வீட்டுக்கு குடிபுகும் குடும்ப தகராறில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் ராஜகாளியம்மன் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி சப்னா (வயது 34). பி.காம். பட்டதாரி. தற்போது சப்னா 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். தனியார் நிறுவனங்களில் வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டால் அதற்கு ஆட்களை தேர்வு செய்து கொடுக்கும் பணியை சப்னா செய்து வந்தார்.

சீனிவாசனின் சொந்த ஊர் விழுப்புரம் ஆகும். சப்னா திருப்பூரைச் சேர்ந்தவர். சீனிவாசனும், சப்னாவும் உறவினர்கள். இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. யசீகா (8) என்ற மகள் இருக்கிறாள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் சப்னா கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார். உறவினர்கள் அவரை சமரசப்படுத்தி கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

இதன்பின்னர் கணவனும், மனைவியும் சேர்ந்து புதிதாக ஒரு வீடு வாங்கினார்கள். இதைத்தொடர்ந்து புதுமனை புகுவிழா நடத்துவதற்காக அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர்.

இந்தநிலையில், சப்னா கர்ப்பிணியாக இருப்பதால் புதுமனை புகுவிழா நடத்துவதை தள்ளி வைக்க வேண்டும் என்று கணவர் மற்றும் உறவினர்கள் கூறியதாக தெரிகிறது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மனவேதனை அடைந்த சப்னா நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். சப்னா உடலை போலீசார் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதுபற்றி குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சப்னா விபரீத முடிவு எடுத்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story