சிதம்பரத்தில்: 4 கடைகளில் திருடிய வாலிபர் கைது


சிதம்பரத்தில்: 4 கடைகளில் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2018 10:00 PM GMT (Updated: 26 Oct 2018 11:20 PM GMT)

சிதம்பரத்தில் 4 கடைகளில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சிதம்பரம், 

கொள்ளிடம் சரஸ்வதி விளாகம் தெருவை சேர்ந்தவர் விஜயேந்திரன்(வயது 38). கட்டுமான தொழில் செய்து வரும் இவருக்கு சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் கடை உள்ளது. நேற்று முன்தினம் இவருடைய கடை பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.9 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரிந்தது.

இதேபோல் பக்கத்தில் உள்ள நடராஜன் என்பவரது கம்ப்யூட்டர் கடையில் ரூ.1,300-ம், விஜயமார்த்தாண்டம் என்பவரது கம்ப்யூட்டர் கடையில் ஒரு எல்.இ.டி. பல்பும், கலைவாசன் என்பவரின் டிஜிட்டல் பிரிண்டர் கடையில் ரூ.500-ம் திருடு போயிருந்தது. இதனை மர்மநபர் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் சிதம்பரம் நகர போலீசார் கஞ்சித்தொட்டி முனை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் ராஜேஷ்(32) என்பதும், 4 கடைகளில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, சிதம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story