குடியாத்தம் அருகே பன்றிக்காய்ச்சலுக்கு விவசாயி பலி


குடியாத்தம் அருகே பன்றிக்காய்ச்சலுக்கு விவசாயி பலி
x
தினத்தந்தி 28 Oct 2018 10:57 PM GMT (Updated: 28 Oct 2018 10:57 PM GMT)

குடியாத்தம் அருகே பன்றிக்காய்ச்சலுக்கு விவசாயி பலியானார்.

குடியாத்தம்,

குடியாத்தம் - மேல்ஆலத்தூர் ரோடு பீமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜி.ராமமூர்த்தி (வயது 43), விவசாயி. இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி ராமமூர்த்திக்கு காய்ச்சல் மற்றும் லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறி தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து ராமமூர்த்தியை தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். 14 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்த ராமமூர்த்தி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

ராமமூர்த்தி பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது குறித்து சென்னை தனியார் மருத்துவமனை மூலம் வேலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பீமாபுரம் மற்றும் சுற்றுப்பகுதியில் மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story