எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் வேலை வேண்டும் - மருத்துவ பணியாளர்கள் மனு


எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் வேலை வேண்டும் - மருத்துவ பணியாளர்கள் மனு
x
தினத்தந்தி 29 Oct 2018 10:42 PM GMT (Updated: 29 Oct 2018 10:42 PM GMT)

எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் வேலை வழங்க வேண்டும் என்று அவசர சிகிச்சை மருத்துவ பணியாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மதுரை,

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அதில் மதுரை கோ.புதூர் சுந்தரராஜ் என்பவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

மதுரை ஐ.டி.ஐ. தொழிற்பேட்டை வழியாக கே.கே.நகர் செல்லும் சாலை, கற்பக நகர், சிப்காட் வழியாக மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் செல்லும் சாலை, தொழிற்பேட்டை காலனி வழியாக தபால் அலுவலகம் செல்லும் சாலை ஆகியவற்றில் நிறைய பள்ளங்கள் உள்ளன. அதனை சீரமைக்கக்கோரி மாநகராட்சியிடம் மனு கொடுத்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கலெக்டர் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

அவசர சிகிச்சை நுட்புனர்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில்,‘‘ மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை நுட்புனர் படிப்பு படித்து இருக்கிறோம். முறையான பயிற்சி பெற்ற எங்களை, மதுரையில் புதிதாக தொடங்க உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றில் பணி நியமனம் செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

வாடிபட்டி அருகே தாதம்பட்டி கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘‘எங்கள் கிராமத்தில் உள்ள அருந்ததியர் சமூகத்தினர் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த மனையும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ என்று கூறப்பட்டு இருந்தது.


Next Story