வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு: கலெக்டர் தகவல்


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு: கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 30 Oct 2018 9:45 PM GMT (Updated: 30 Oct 2018 4:40 PM GMT)

வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேனி,

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தங்களது பதிவை கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு தற்போது புதுப்பித்துக்கொள்ள தமிழக அரசு சலுகை அறிவித்துள்ளது. இதன்படி, தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2011-ம் ஆண்டு ஜனவரி முதல் 2016-ம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலத்தில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் தற்போது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

பதிவு புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்துடன் வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையின் நகல், கல்விச்சான்றுகள், சாதிச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றின் நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், பதிவுதாரர்கள் ஆன்லைன் வாயிலாகவும் விடுபட்ட தங்களின் பதிவை புதுப்பித்துக் கொள்ள வசதி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. www.tnv-e-l-a-iv-a-a-i-ppu.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.

இந்த சலுகை 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ந்தேதி வரை கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த கால அவகாசத்துக்கு பின்னர் பெறப்படும் கோரிக்கை மனுக்களை ஏற்க இயலாது.

எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பதிவை புதுப்பித்து தங்களின் பழைய பதிவு மூப்பை பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story