நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை பா.ஜனதா - சிவசேனா இணைந்து சந்திக்கும் : முதல்-மந்திரி நம்பிக்கை


நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை பா.ஜனதா - சிவசேனா இணைந்து சந்திக்கும் : முதல்-மந்திரி  நம்பிக்கை
x
தினத்தந்தி 31 Oct 2018 12:25 AM GMT (Updated: 31 Oct 2018 12:25 AM GMT)

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை பா.ஜனதாவும், சிவசேனாவும் இணைந்து சந்திக்கும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருகட்சிகளும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றன. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இனி வரும் தேர்தல்களில் சிவசேனா தனித்தே போட்டியிடும் என அறிவித்தார்.

இதற்கிடையே வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அறிவித்துவிட்டன. இது ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பா.ஜனதா அரசு மீது சிவசேனா தொடர்ந்து விமர்சனம் வைத்தாலும் வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்தே போட்டியிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை படி பார்த்தால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தங்களின் ஓட்டுகளை சிதறவிடாமல் ஒருங்கிணைத்துள்ளனர் என்பதே நிதர்சனம் ஆகும். பா.ஜனதா, சிவசேனாவும் கருத்தியல் ரீதியாக நெருக்கமான கட்சிகளாகும். எனவே இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுவதால் ஓட்டுகள் சிதற வாய்ப்புள்ளது.

எங்கள் வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் எதிராக போட்டியிட்டால் இரு கட்சிகளும் பாதிக்கப்படும். இந்த உண்மையை புரிந்து வைத்துள்ளோம். எனவே வரும் தேர்தலை பா.ஜனதா, சிவசேனாவும் ஒன்றாக சந்திக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் இடம் அரபிக்கடலில் இருந்து மும்பை கடற்கரை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

“ சிலை நிறுவுவதற்கான இடத்தை மாற்ற எந்த தேவையும் ஏற்படவில்லை. முன்பு முடிவு செய்யப்பட்ட இடத்திலேயே பணிகள் தொடங்கி விட்டன” என்றார்.

மேலும் ஜெல்யுக்த் சிவார் நீர் சேமிப்பு திட்டம் தோல்வி அடைந்ததாக கூறிய எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்ததுடன். இத்திட்டம் 100 சதவீதம் வெற்றி அடைந்ததாக கூறினார்.


Next Story