கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்


கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 1 Nov 2018 9:45 PM GMT (Updated: 1 Nov 2018 1:33 PM GMT)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் நடந்தது.

கோவில்பட்டி,

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

திருக்கல்யாண திருவிழா

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 24–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

ஒவ்வொரு திருநாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர் சார்பில் கொண்டாடப்படுகிறது. 9–ம் திருநாளான நேற்று வணிக வைசிய சங்கம் சார்பில், தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை நடந்தது. பின்னர் சுவாமி–அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தேரில் அம்மன் எழுந்தருளினார்.

தேரோட்டம்

காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரளான ஆண்களும், பெண்களும் பக்தி கோ‌ஷங்களை முழங்கியவாறு, வடம் பிடித்து தேர் இழுத்தனர். கீழ ரத வீதியில் இருந்து புறப்பட்ட தேரோனது தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக காலை 11 மணிக்கு கோவில் நிலையை வந்தடைந்தது.

விழாவில் வணிக வைசிய சங்க தலைவர் பூவலிங்கம், துணை தலைவர் காளியப்பன், செயலாளர் பழனிகுமார், துணை செயலாளர் வேல்முருகன், வணிக வைசிய நடுநிலைப்பள்ளி செயலாளர் வெங்கடேஷ், முன்னாள் நகரசபை துணை தலைவர் ரத்தினவேல், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், பஞ்சாயத்து செயலாளர் ரமேஷ், இனாம் மணியாச்சி கூட்டுறவு சங்க தலைவர் மகேஷ்குமார், வேலுமணி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இரவில் அன்ன வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நாளை மறுநாள், திருக்கல்யாணம்

10–ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா, இரவு 7.30 மணிக்கு ரி‌ஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது. 11–ம் நாளான நாளை (சனிக்கிழமை) மதியம் 1 மணிக்கு தபசு சப்பரத்தில் அம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறார். மாலை 6 மணிக்கு சுவாமி ரி‌ஷப வாகனத்தில் பூவனநாதராக அம்மனுக்கு காட்சி கொடுக்கிறார்.

12–ம் நாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா, இரவு 7 மணிக்கு சுவாமி–அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. பின்னர் சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பல்லக்கிலும் எழுந்தருளி, பட்டினபிரவேசம் நடைபெறும். ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, கோவில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணிய ராஜன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Next Story