ராமநாதபுரம் அருகே பரபரப்பு: திருக்கை மீன் முள்ளை ஆயுதமாக பயன்படுத்தி வாலிபர் கொலை - தகராறை விலக்க சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்


ராமநாதபுரம் அருகே பரபரப்பு: திருக்கை மீன் முள்ளை ஆயுதமாக பயன்படுத்தி வாலிபர் கொலை - தகராறை விலக்க சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்
x
தினத்தந்தி 1 Nov 2018 9:30 PM GMT (Updated: 1 Nov 2018 11:55 PM GMT)

திருக்கை மீன் முள்ளை ஆயுதமாக பயன்படுத்தி வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்டார். தகராறை விலக்கச் சென்றவருக்கு இந்த பரிதாபம் நேர்ந்தது.

கீழக்கரை, 

ராமநாதபுரம் அருகே, கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன்கள் முத்துக்குமார், நாகராஜ். இவர்களுக்கும், பண்ணாட்டார் தெருவை சேர்ந்த முனியசாமி மகன் தக்காளி என்ற நாகராஜூக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது தக்காளி நாகராஜூவின் சகோதரி சத்யாவும், அவருடைய கணவர் ஆனந்தும் (வயது 27) தகராறை விலக்கச் சென்றனர். இதில் முத்துக் குமார் ஆத்திரம் அடைந்தார். ராட்சத திருக்கை மீனின் முள் ஆயுதம் போன்று கூர்மையானது. எனவே அந்த மீனின் முள்ளை முத்துக்குமார் வைத்திருந்தார். அதை பயன்படுத்தி ஆனந்தை அவர் குத்தியதாக தெரிகிறது.

இதில் படுகாயம் அடைந்த ஆனந்த் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கீழக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்கள். ஆனந்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story