காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்


காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்
x
தினத்தந்தி 2 Nov 2018 12:22 AM GMT (Updated: 2 Nov 2018 12:22 AM GMT)

காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் தர்மபுரி மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று பென்னாகரத்தில் நடந்த கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

பென்னாகரம்,

காவிரி உபரிநீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பக்கோரி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் பா.ம.க. உழவர் பேரியக்கம் சார்பில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான விழிப்புணர்வு பிரசார பொதுக்கூட்டம் பென்னாகரம் பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பா.ம.க தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் வரவேற்று பேசினார். உழவர் பேரியக்க தலைவர் ஆலயமணி, செயலாளர் வேலுச்சாமி, மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, வன்னிய சங்க மாநில துணைத்தலைவர் பாடி செல்வம், மாநில இளைஞர் அணி செயலாளர் முருகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- கர்நாடகாவில் இருந்து காவிரிநீர் தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்திற்கு தான் முதன் முதலில் வருகிறது. மாவட்ட மக்கள் இந்த தண்ணீரை பயண்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். காவிரிக்கு வரும் உபரிநீர் 173 டி.எம்.சி. வீணாக கடலில் கலக்கிறது. தர்மபுரி மாவட்ட மக்கள் காவிரி உபரிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே காவிரி உபரி நீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளம், குட்டைகளில் நிரப்ப தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமும் முழுமை பெறவில்லை.

தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1,500 அடிக்கு கீழ் சென்றுள்ளது. இதனால் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் வேலை இல்லாமல் வேறு மாநிலங்களுக்கு சென்று கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். எனவே தான் காவிரி உபரிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ம.க. 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் திட்டத்தை தொடங்கி இதுவரை 7.25 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று இருக்கிறோம். இன்னும் 2.75 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று நேரடியாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனுவாக கொடுக்க இருக்கின்றோம்.

இந்த திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றினால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்படும். இல்லை என்றால் தர்மபுரி போராட்டத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் பதவியேற்ற 30 நாளில் முதலில் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி, அதில் 400 கோடி ரூபாயில் காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றுவேன். மீதித்தொகையை பஞ்சப்பள்ளி அணை திட்டம், எண்ணேக்கொல், தும்பலஅள்ளி திட்டம், வாணியாறு திட்டம் போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கி பணி முடிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில இளைஞரணி துணை தலைவர்கள் துரை. சத்தியமூர்த்தி, மந்திரி, மாவட்ட செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் முருகன், முருகேசன், ஜெகதீஷ், சுரேஷ், இளைஞரணி மாவட்ட தலைவர் பாலமுருகன், மாவட்ட அமைப்பு தலைவர் இளையமுருகன், மாவட்ட மகளிரணி நிர்வாகி தமிழ்ச்செல்வி, நகர செயலாளர் வினு அன்பழகன், பசுமை தாயகம் நகர செயலாளர் பவுனேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

இதேபோல் நேற்று முன்தினம் பாலக்கோட்டில் பா.ம.க. சார்பில் விழிப்புணர்வு பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தொகுதி அமைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட தலைவர் செல்வகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் ராஜா நன்றி கூறினார்.

Next Story