சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில்: டிரைவருக்கு 14 ஆண்டு சிறை - கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில்: டிரைவருக்கு 14 ஆண்டு சிறை - கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 2 Nov 2018 10:30 PM GMT (Updated: 2 Nov 2018 9:50 PM GMT)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் டிரைவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கடலூர், 

திட்டக்குடி அருகே மோசட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு. இவருடைய மகன் புருஷோத்தமன் (வயது 30). 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்த இவர் தற்போது லாரி டிரைவராக உள்ளார். இவர் கடந்த 20.5.2016 அன்று இரவு 7 மணி அளவில் தனது ஊரில் உள்ள சாலையில் நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமி தனது உறவினர் வயலில் களை பறித்து விட்டு தனியாக நடந்து வந்தார். இதை பார்த்த புருஷோத்தமன் சிறுமியை வழிமறித்து, தான் வைத்திருந்த துண்டை அவளது வாயில் அமுக்கி அங்குள்ள கரும்பு தோட்டத்துக்குள் தூக்கிச்சென்றார்.

பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது பற்றி வெளியில் சொன்னால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இருப்பினும் இது பற்றி அந்த சிறுமி தன்னுடைய தாயிடம் கூறினார். அதன்பிறகு அந்த சிறுமி இது தொடர்பாக விருத்தாசலம் மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமனை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார்.

அதில், இவ்வழக்கில் புருஷோத்தமன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

Next Story