திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிலைகளின் தொன்மை குறித்து 3-வது நாளாக ஆய்வு


திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிலைகளின் தொன்மை குறித்து 3-வது நாளாக ஆய்வு
x
தினத்தந்தி 3 Nov 2018 11:00 PM GMT (Updated: 3 Nov 2018 7:05 PM GMT)

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிலைகளின் தொன்மை குறித்து நேற்று 3-வது நாளாக ஆய்வு நடந்தது.

திருவாரூர்,

தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சிலைகளின் தொன்மை தன்மை மற்றும் உண்மை தன்மை குறித்து ஆய்வு நடத்தும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மற்றும் தொல்லியல் துறையினர் திருவாரூரில் உள்ள தியாக ராஜர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

கோவில் வளாகத்தில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இங்கு தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 625 கோவில்களுக்கு சொந்தமான 4,635 சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி ஆய்வு பணிகள் தொடங்கின. இந்த ஆய்வு 2 நாட்கள் நீடித்தது. பின்னர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதில் 146 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த நிலையில் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் சிலைகளை ஆய்வு செய்யும் பணி 2-வது கட்டமாக கடந்த 1-ந் தேதி தொடங்கியது. 2 நாட்களில் 411 சிலைகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் நேற்று 3-வது நாளாக ஆய்வு நடந்தது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மலைச்சாமி, பழனிசெல்வம் ஆகியோர் தலைமையில், தொல்லியல் துறையினர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் என 50-க்கும் மேற்பட்டவர்கள் சிலைகளை ஆய்வு செய்தனர். இதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பார்வையிட்டார். அப்போது அவர் ஆய்வு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Next Story