திருப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுங்கள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வேண்டுகோள்


திருப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுங்கள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 3 Nov 2018 10:30 PM GMT (Updated: 3 Nov 2018 7:32 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுங்கள் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பூர், 
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி வெடிக்கப்படும் பட்டாசு பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடைக்கோரி கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் கோர்ட்டு நிபந்தனைகளை விதித்தது.

மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், திறந்த வெளிகளில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தீபாவளியன்று இரவு 8 மணிமுதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் இந்த 2 மணிநேரம் போதாது என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த கோர்ட்டு, அந்த 2 மணி நேரத்தை தமிழ்நாடு அரசே தீர்மானித்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

இதன்படி தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும், தீபாவளிக்கு முன்பு 7 நாட்களும் தீபாவளிக்கு பின்பு ஏழு நாட்களும் மொத்தம் 14 நாட்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் காற்றின் தரத்தை அளவீடு செய்யும். மாசில்லாத சுற்றுச்சூழலை பேணி காப்பதுடன், பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவது நமது கடமையாக உள்ளது. இதனால், பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசு தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்த அந்த பகுதிகளில் உள்ள நலசங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இதன்படி மக்கள் அனைவரும் விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவோம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Next Story