டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 3 Nov 2018 10:15 PM GMT (Updated: 3 Nov 2018 8:49 PM GMT)

கரூர் டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

கரூர்,

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டியில் உள்ள தொழிற்பேட்டை வளாகத்தில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் உள்ளது. இதனையொட்டியவாறே டாஸ்மாக் குடோன் செயல்படுகிறது. இங்கிருந்து தான் கரூர் மாவட்டத்தில் உள்ள 96 டாஸ்மாக் கடைகளுக்கும் விற்பனைக்காக, மதுபாட்டில்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி குடோனில் இருப்பில் உள்ள மதுவகைகளை விற்பனைக்காக டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று இரவு 7 மணியளவில் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென அங்கு வந்த, கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுலோச்சனா, ரத்தினவள்ளி உள்பட போலீசார், டாஸ்மாக் குடோனுக்குள் புகுந்து அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது தொழிற்பேட்டையின் முன்புற கதவைபோலீசார் இழுத்து பூட்டினர். சரக்கு வாகனங்களில் மதுபாட்டில்கள் ஏற்றும் பணி நிறுத்தப்பட்டது.

பரபரப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி மதுவகைகள் ஏதேனும் பதுக்கப்பட்டு ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் விற்கப்படுகிறதா?, கணக்கில் வராத பணம் ஏதும் புழக்கத்தில் இருக்கிறதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் துருவி துருவி போலீசார் விசாரித்தனர். இரவு நீண்ட நேரமாக நடந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story