திண்டிவனத்தில் கத்திமுனையில் ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு - 3 பேர் கைது


திண்டிவனத்தில் கத்திமுனையில் ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு - 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 Nov 2018 9:45 PM GMT (Updated: 5 Nov 2018 5:59 PM GMT)

திண்டிவனத்தில் கத்தி முனையில் ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம், 

திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் சந்தோஷ் (வயது35). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் திண்டிவனத்தில் உள்ள மயிலம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த 3 பேர், சந்தோசை மறித்தனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, சந்தோஷிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு அதே காரில் தப்பிச்சென்றனர். பின்னர் இது குறித்து சந்தோஷ் திண்டிவனம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று திண்டிவனம் போலீசார் ஜக்காம்பேட்டை புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் மறித்து அதில் வந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் துருவி, துருவி விசாரித்தனர்.

அப்போது அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கரை கிராமத்தை சேர்ந்த விஜயன் மகன் பிரபு(26), தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் சாலைக்கார தெருவை சேர்ந்த கார்த்திக்(33), திண்டிவனம் அடுத்த வேங்கை கிராமத்தை சேர்ந்த அய்யனார் மகன் நாகமணி(26) என்பதும், நடந்து சென்று கொண்டிருந்த சந்தோஷிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பிரபு உள்பட 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த காரை பறிமுதல் செய்தனர்.

Next Story