தண்ணீர் தொட்டியில் டெங்கு கொசுவை உருவாக்கும் புழுக்கள்: தனியார் பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை


தண்ணீர் தொட்டியில் டெங்கு கொசுவை உருவாக்கும் புழுக்கள்: தனியார் பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Nov 2018 10:15 PM GMT (Updated: 5 Nov 2018 8:00 PM GMT)

தண்ணீர் தொட்டியில் டெங்கு கொசுவை உருவாக்கும் புழுக்கள் இருந்த தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

செங்குன்றம்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்பேரில் திருவள்ளூர் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் கிருஷ்ணராஜ் தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செங்குன்றத்தை அடுத்த கிராண்ட்லைன் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் துணை இயக்குனர் மற்றும் செங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவர் பா.ஜோஸ்பின் மேற்பார்வையில் சுகாதார அலுவலர் ராஜ்குமார், புழல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மல்குமார், டாக்டர் திலீப் மணிகண்டன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ரூ.1 லட்சம் அபராதம்

அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் புழுக்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் அப்பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான டைல்ஸ் விற்பனை செய்யும் கடையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு டெங்கு காய்ச்சலை உருவாக்கும் புழுக்கள் இருந்ததால் அந்த கடைக்கும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த பழைய இரும்பு கடையில் சோதனை செய்யப்பட்டது. அங்கும் டெங்கு காய்ச்சல் உருவாக்கும் புழுக்கள் இருந்ததால் அந்த கடைக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story