அதிக கட்டணம் வசூலித்த 137 ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம் - போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


அதிக கட்டணம் வசூலித்த 137 ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம் - போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Nov 2018 10:30 PM GMT (Updated: 5 Nov 2018 10:18 PM GMT)

அதிக கட்டணம் வசூலித்த 137 ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வேலூர்,

வேலூர், கிருஷ்ணகிரி மாவட்ட சுங்கச்சாவடிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடத்திய சோதனையின்போது அதிக கட்டணம் வசூலித்ததாகவும், போக்குவரத்து விதிகளை மீறியதாகவும் 137 ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியையொட்டி நேற்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதையொட்டி சென்னை போன்ற வெளியூர்களில் வசிப்பவர்கள் கடந்த 2-ந் தேதி மாலையே ரெயில் மற்றும் பஸ்களில் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவர வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனாலும் கூட்டம் காரணமாக பெரும்பாலானோர் ஆம்னி பஸ்களில் பயணம் மேற்கொண்டனர். கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தது.

அதைத்தொடர்ந்து ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். வேலூர் சரக போக்குவரத்துத் துணை ஆணையர் செந்தில்நாதன் மேற்பார்வையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ராமகிருஷ்ணன் (வேலூர்), பாத்தப்பசாமி (ராணிப்பேட்டை), அசோகன் (ஓசூர்) ஆகியோர் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர்கள் ராஜசேகர், வெங்கட்ராகவன் உள்ளிட்ட குழுவினர் பள்ளிகொண்டா, வாலாஜா, கிருஷ்ணகிரி ஆகிய சுங்கச்சாவடி பகுதிகளில் கடந்த 2-ந் தேதி முதல் ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

4-ந் தேதிவரை அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? முறையாக வரி செலுத்தப்பட்டுள்ளதா? விதிமுறைகள் மீறப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர். 2-ந் தேதி 186 பஸ்களில் சோதனை நடத்தி 47 பஸ்களுக்கு ரூ.1 லட்சத்து 7,300 அபராதம் விதிக்கப்பட்டது. 3-ந் தேதி 192 பஸ்களில் சோதனை நடத்தி 43 பஸ்களுக்கு ரூ.92 ஆயிரத்து 100 அபராதமும், 4-ந் தேதி 186 பஸ்களில் ஆய்வு மேற்கொண்டு 47 பஸ்களுக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 200 அபராதமும் வசூலிக்கப்பட்டது.

மொத்தம் 3 நாட்களில் அதிக கட்டணம் வசூலித்ததாகவும், போக்குவரத்து விதிகளை மீறியதாகவும் 137 பஸ்களுக்கு ரூ.3 லட்சத்து 11 ஆயிரத்து 600 அபராதமாகவும், ரூ.3,430 வரியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story