ரேஷன்கடையில் தூங்கிய பெண் தலையில் கல்லை போட்டு கொலை - நள்ளிரவில் மர்மநபர் வெறிச்செயல்


ரேஷன்கடையில் தூங்கிய பெண் தலையில் கல்லை போட்டு கொலை - நள்ளிரவில் மர்மநபர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 5 Nov 2018 11:00 PM GMT (Updated: 5 Nov 2018 10:34 PM GMT)

ஆம்பூர் அருகே ரேஷன்கடையில் தூங்கிய பெண்ணை தலையில் பாறாங்கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே உள்ள தேவலாபுரத்தை சேர்ந்தவர் மணியம்மாள் (வயது 60). இவரது கணவர் ராமன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு மணியம்மாள் சொந்த வீடும் இல்லாமல் வாழ வழியின்றி பலரிடம் பிச்சை கேட்டு அவர்கள் தரும் பணத்தில் பிழைத்து வந்தார். தினமும் அவர் அதே ஊரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தையொட்டியுள்ள ரேஷன்கடை வளாகத்தில் இரவு தூங்குவார்.

கணவனை இழந்து வறுமையில் தவித்த பெண் என்பதால் அவர் மீது அந்த பகுதி பொதுமக்களும், ரேஷன்கடை ஊழியர்களும் பரிதாபப்பட்டு அங்கேயே அவர் தங்குவதற்கு அனுமதித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை ரேஷன்கடை வழியாக சென்றவர்கள், மணியம்மாள் கோரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அருகில் சென்று பார்த்தபோது அவர் தலையில் பாறாங் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், உமராபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி மற்றும் போலீசார் அங்கு சென்று மணியம்மாளின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரேஷன்கடை அருகிலேயே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியும் உள்ளதால் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டிருந்தது. அதில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தபோது நள்ளிரவு 1 மணியளவில் மர்மநபர் ஒருவர் அங்கு வந்து சென்றதை போலீசார் அடையாளம் கண்டனர். அதே நபர் 3 மணியளவில் ஒரு நாயுடன் அங்கு மீண்டும் வந்து சென்றுள்ளார். எனவே அந்த நபர்தான் இவரை கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரிக்க அவரை தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு வேலூரிலிருந்து போலீஸ் மோப்பநாய் சன்னி வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் மோப்பநாயை போலீசார் மோப்பம்பிடிக்க விட்டனர். அதன்பின் அங்கிருந்து வேகமாக ஓடிய நாய் சிறிது தூரத்தில் உள்ள பாலாற்று பாலம் வரை சென்று நின்று விட்டது. அதன்பிறகு அந்த நபர் வாகனத்தில் ஏறி தப்பியிருக்கலாம் என தெரிகிறது.

தனியாக வசித்த பெண் தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story