கருப்பு பேட்ஜ் அணிந்து கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நிலுவை தொகை வழங்க கோரிக்கை


கருப்பு பேட்ஜ் அணிந்து கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நிலுவை தொகை வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 7 Nov 2018 11:00 PM GMT (Updated: 7 Nov 2018 5:41 PM GMT)

நிலுவை தொகை வழங்க கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,


தஞ்சை மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கடந்த 2015–16–ம் ஆண்டிற்கான மாநில அரசு அறிவித்த விலை டன் ஒன்றுக்கு ரூ.450 வீதம் 2 ஆண்டுகளுக்கு சுமார் 30 கோடி ரூபாய் நிலுவை தொகை உள்ளது.

 இந்த நிலுவை தொகையை வழங்க கோரி கரும்பு விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தினர். மேலும் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டமும் நடத்தினர். மாவட்ட கலெக்டரிடம் நிலுவை தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கும் படி கரும்பு விவசாயிகள் கோரிக்கை மனுவும் கொடுத்திருந்தனர்.


இந்தநிலையில் நிலுவை தொகை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விவசாயிகள் தீபாவளி பண்டிகையை புறக்கணித்து கருப்பு தீபாவளியாக அனுசரிக்க முடிவு செய்தனர். அதன்படி கரும்பு விவசாயிகள் தஞ்சை குருங்குளம் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்தும் கைகளில் கரும்பு ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலுவை தொகை இன்னும் 15 நாட்களுக்குள் வழங்காவிட்டால் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

இதில் தஞ்சை, திருவையாறு பகுதிகளை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Next Story