கோட்டூர்புரத்தில் மின்மாற்றியை உயரத்தில் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை


கோட்டூர்புரத்தில் மின்மாற்றியை உயரத்தில் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Nov 2018 11:00 PM GMT (Updated: 7 Nov 2018 6:44 PM GMT)

கோட்டூர்புரம் நாயுடு தெருவில் தரையில் உள்ள மின்மாற்றியை உயரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அடையாறு,

கோட்டூர்புரம் நாயுடு தெருவில் சுமார் 750-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு மின்சாரம் வினியோகிக்கும் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) காவலர் குடியிருப்பு வளாகம் அருகே உள்ளது. இந்த காவலர் குடியிருப்பில் 75 வீடுகள் உள்ளன.

சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த மின்மாற்றி பெட்டியின் அருகில் கோவில், பள்ளிக்கூடம் உள்ளன. பாதுகாப்பற்ற நிலையில் தரையில் மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்மாற்றி வைக்கப்பட்டுள்ள பெட்டியின் கதவுகள் சரியாக மூட முடியாத நிலையில் துருப்பிடித்து திறந்தநிலையில் உள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மின்மாற்றி அருகே சென்ற மாடு ஒன்று மின்சாரம் தாக்கி காயம் அடைந்தது. பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்த மின்மாற்றியை உரிய முறையில் பராமரிக்கவும், உயரத்தில் வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த பலனும் இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

உயரத்தில் அமைக்க கோரிக்கை

பொதுவாக மின்மாற்றியில் திடீர் பழுது ஏற்பட்டால் பலத்த சத்தத்துடன் அதில் இருந்து தீப்பொறி கிளம்புவது வழக்கம். சில நேரங்களில் பெரியஅளவில் தீ விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. தினமும் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் தினமும் மின்மாற்றி வைக்கப்பட்டுள்ள சாலையை தான் கடந்து செல்ல வேண்டியுள்ளது. அந்த நேரங்களில் மின்மாற்றியில் தீ விபத்து எதுவும் ஏற்பட்டு விடுமோ? என்ற அச்ச உணர்விலேயே அவர்கள் செல்ல வேண்டியுள்ளது.

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், அசம்பாவிதம் நடப்பதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தனப்போக்கை கைவிட்டு இந்த மின்மாற்றியை தரையில் இருந்து அகற்றி உயரமான இடத்தில் பாதுகாப்பாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story