கோவையில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 5 பேர் பலி


கோவையில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 5 பேர் பலி
x
தினத்தந்தி 7 Nov 2018 9:45 PM GMT (Updated: 7 Nov 2018 10:40 PM GMT)

கோவையில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 5 பேர் பலியானார்கள்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகள் சுபஸ்ரீ (வயது 14). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பல்வேறு கட்ட பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமி சுபஸ்ரீயை டாக்டர்கள் சிறப்பு வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கோவையை அடுத்த தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் கதிர்வேல் (32). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரை கோவை அரசு ஆஸ்பத்திரி சிறப்பு வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

மேட்டுப்பாளையத்தை அடுத்த சாமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் போத்திராஜ் (57). இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதை அறிந்தனர். இதையடுத்து அவரை சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.

ஊட்டியை அடுத்த கோத்தகிரி அணிக்கொரை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (56). இவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டது. இதில் சந்திரசேகருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் நேற்று முன்தினம் இறந்தார்.

சேலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (39). இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் காய்ச்சல் குறையவில்லை. இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

Next Story