விழுப்புரம் அருகே: மொபட்-மோட்டார் சைக்கிள் மோதல்- 2 பேர் பலி


விழுப்புரம் அருகே: மொபட்-மோட்டார் சைக்கிள் மோதல்- 2 பேர் பலி
x
தினத்தந்தி 7 Nov 2018 10:15 PM GMT (Updated: 7 Nov 2018 7:31 PM GMT)

விழுப்புரம் அருகே மொபட்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

செஞ்சி, 

விழுப்புரம் அருகே உள்ள அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வடமலை(வயது 45). இவர் நேற்று முன்தினம் மாலை கோழி வாங்குவதற்காக தனது மொபட்டில் அரியலூர் திருக்கைக்கு புறப்பட்டார். இதேபோல் அரியலூர் திருக்கையை சேர்ந்த மணிகண்டன்(28), சிவா(33), செல்வதுரை(25), கல்லாய் சொரத்தூரை சேர்ந்த வேலு(41) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் அனுமந்தபுரம் நோக்கி புறப்பட்டனர். கக்கனூர் என்ற இடத்தில் மொபட்டும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் வடமலை உள்பட 5 பேரும் படுகாயமடைந்தனர்.

இவர்கள் அனைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வேலு(41) பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வடமலை மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலையில் வடமலை பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.

Next Story